states

img

கார்கில் வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட களங்கம் நாட்டுக்கு தலைகுனிவு : திருமாவளவன் சாடல்

“மணிப்பூரில் கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். இது நாட்டுக்குத் தலைக்குனிவு” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல். திருமாவளவன் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “மணிப்பூர் மாநில மக்களும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிய அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளன. பிரதமர் மோடி கண்டிக்கவில்லை; முதல்வர் வந்து பார்க்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். மணிப்பூர் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். குக்கி, மெய்டெய் என இருதரப்பும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநில ஆளுநரிடம் இதனை எடுத்துக் கூறினோம். மணிப்பூரிலும் மட்டுமல்ல; ஹரியானாவிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறியாட்டம் தொடருகிறது; இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக உறுதி மொழி எடுக்கிறோம்; அவர்களை அழித்தொழிப்போம் என பேசுகின்றனர்; ஜெய்ப்பூரில் ரயில்வே காவலர் ஒருவர் இஸ்லாமியர்களைத் தேடித் தேடி சென்று சுட்டுக் கொன்றுள்ளார்; மோடிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோஷமிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு, தலித்துகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்கள் அச்சத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர். எஸ்சி எஸ்டி கல்வி உதவித் தொகை மறுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்காக 12 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. தக்காளி கிலோ ரூ. 200, ரூ. 300-க்கு விற்பனையாகிறது. பெரும்பான்மை இந்து மக்களுக்கும் எதிரானதாக மோடி அரசு இருக்கிறது. இந்து சமூகத்தை சார்ந்த மக்கள்தான் கர்நாடகாவில் பாஜக-வை வீழ்த்தி காங்கிரசை ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர். மோடி அமைச்சரவை மீது எனது நம்பிக்கை இன்மையை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்; மோடி பதவி விலக வேண்டும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.