states

img

மணிப்பூர் பற்றி எரியக் காரணமான உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீக்கம்!

இம்பால், பிப். 22 - மணிப்பூர் மாநிலம் கடந்த 10 மாதத்திற்கும் மேலாக பற்றி எரிவதற்குக் காரணமான நீதிபதி எம்.வி. முரளிதரனின் தீர்ப்பை, மணிப்பூர் உயர் நீதிமன்றமே நீக்கியுள்ளது. தனி நீதிபதி வழங்கிய இந்த தீர்ப்பு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் அரசி யலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு  எதிராக உள்ளதால் அது நீக்கப்படுவ தாக மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்மேய் கைபுல்ஷில்லு பிப்ரவரி 21 அன்று உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த ‘மெய்டெய்’ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், நான்கு வாரங்களில் உரிய முடிவு எடுக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் கடந்த 2023 மார்ச்சில்  மணிப்பூர் பாஜக அரசுக்கு உத்தர விட்டிருந்தார். இதையடுத்தே மணிப்பூர் போராட்டங்கள் வெடித்து - அது வன்முறையாக மாறியது. மெய்டெய் மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கக் கூடாது என்று குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடி பிரிவினர் போராட்டம் - பேரணிகளை நடத்த- பதிலுக்கு மெய்டெய் பிரிவினரும் போராட்டத்தில் குதித்தனர்.

ஒரு கட்டத்தில், மெய்டெய் பிரிவின ருக்கும் - பழங்குடியினருக்கும் இடை யிலான நேரடி வன்முறையாக மாறியது. குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், கடைகள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பாலியல் வன்கொடுமைகள், படு கொலைகளும் கணக்கு வழக்கின்றி நடக்க ஆரம்பித்தன.  குக்கி பிரிவைச் சேர்ந்த பெண் களை, மெய்டெய் பிரிவு ஆண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று, கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய கொடுமைகளும் அரங் கேறின.

வன்முறைகளில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில பாஜக அரசே, மெய்டெய் பிரி வினருக்கு ஆதரவாக ஒருதரப்பாக மாறியது. ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அரசு அதிகாரிகள் என அரசு நிர்வாகமே இரண்டாக உடைந்தது. உள்துறை அமித்ஷா நேரில் சென்றாலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் பைரேன் சிங்-கை பதவியி லிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோதும், கடைசிவரை பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் பக்கமே செல்லவில்லை.

இப்போதுவரை மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டி ருக்கிறது. இந்நிலையில்தான், மணிப்பூர் இனமோதலுக்கு தூபம் போடுவதாக அமைந்த- மெய்டெய் பிரிவினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது பற்றி நான்கு வாரங்களில் முடிவெடுக்கும் என்று நீதிபதி எம்.வி. முரளிதரன் அளித்திருந்த தீர்ப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அரசு - மிலிந்த் & ஓர்ஸ் இடையிலான வழக்கில், இந்திய அரசியலமைப்பின் 342-வது பிரிவின் கீழ்  பழங்குடியினர் பட்டியலை மாற்றவும், திருத்தவும், மாநில அரசுக்கோ, எந்தவொரு நீதி மன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதனை நீதிபதி எம்.வி.  முரளிதரனின் தீர்ப்பு மீறுகிறது என்று  மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கோல்மேய் கைபுல்ஷில்லு உத்தர விட்டுள்ளார்.

இதேபோல உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு, “தனி நீதிபதி  எம்.வி. முரளிதரனின் உத்தரவு உண்மை யில் தவறானது மட்டுமல்ல, அரசியல் சாசன அமர்வுகள் வகுத்துள்ள கொள்கைகளுக்கு எதிரானது” என்று  கூறியிருந்தது. எனினும், உத்தரவு எதையும் பிறப்பிக்காமல் மனுதாரர்கள் தங்களின் வாதங்களை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் விரி வான முறையில் எடுத்துரைக்க வாய்ப்பு  வழங்கியது. இந்நிலையில், கோல்மேய் கைபுல்ஷில்லு அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்பை நீக்கி உத்தர விட்டுள்ளது.