இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் விளாசல்
புதுதில்லி, ஆக. 8 - மணிப்பூர் விவகாரத்தில் மாநில அரசு நிர்வாகம், உள்துறை, தேசிய பாதுகாப்பு ஆகிய மூன்று அம்சங் களிலும் ஒன்றிய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதாக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சிகள் சரமாரியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளன. 80 நாட்களுக்கு மேலாக பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து வாய் திறக்காதது ஏன்; மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்; மணிப்பூர் முதல் வர் பைரேன் சிங்கை பதவியி லிருந்து நீக்காமல் தற்போதுவரை பாதுகாத்து வருவது ஏன்; நாடா ளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்கா மல் ஓடி ஒளிவதேன் என்றும் அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள், மோடி அரசு ‘இரண்டு மணிப்பூரை’ உருவாக்கி இருப்பதாகவும் சாடியுள்ளனர்.
ஓடி ஒளியும் பிரதமர்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 அன்று துவங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி கடந்த 2 வாரமாக நாடாளுமன்றத்திற்கே வராமல் ஓடி ஒளிந்து கொண்டார். அவை விதி எண் 267-இன் கீழ் விரிவான விவாதத்திற்கு எதிர்க் கட்சிகள் அனுமதி கோரியும் சபா நாயகர் அதற்கு அனுமதி மறுத்து விட்டார். இதனால், பிரதமர் மோடியை நாடாளுமன்றத்திற்கு வரவைப் பதற்கும், அவரை பேசவைப்பதற் கும், வேறுவழியே இல்லாமல், நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற ஆயுதத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. சபாநாயகரும் இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டார். அதன்படி செவ்வாயன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என தகவல் வெளியானது. ஆனால், கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலைவர் கவுரவ் கோகோய் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, ராகுல் விவாதத்தை ஏன் தொடங்கவில்லை என பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்ட னர். உடனே காங்கிரஸ் எம்.பி.க்கள், பிரதமர் மோடி அவைக்கு வராமல் எங்கே போனார் என்று பதிலடி கொடுத்தனர்.
கவுரவ் கோகோய்
பின்னர் உரையைத் தொடர்ந்த கவுரவ் கோகோய், “மணிப்பூர் விவ காரத்தில் பிரதமர் நரேந்திர மோடி யின் மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வரவே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்தியா’வுக்கு ஏற்பட்டது. ஒரே இந்தியாவை உருவாக்க வேண்டும் என பேசி வரும் அரசு, இரண்டு மணிப்பூரை உருவாக்கியுள்ளது. ஒன்று மலைகளில் உள்ளது. மற்றொன்று பள்ளத்தாக்கில் உள்ளது” என்றார். மேலும், “மணிப்பூருக்கு நீதி வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் நிலவும் அநீதி அனைத்து இடங்களி லும் நீதிக்கான அச்சுறுத்தலாக மாறும் என்கிறார் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். மணிப்பூர் எரிந்தால் இந்தியா முழுவதும் எரியும். மணிப்பூர் பிரிந்தால் நாடே பிளவு படும். நாட்டின் தலைவர் என்ற முறை யில், பிரதமர் மோடி நாடாளுமன்றத் திற்கு வந்து மணிப்பூர் குறித்து பேச வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக இருக்கிறது. இருப் பினும், அவர் மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி பேச மாட்டேன் என்று மவுன விரதம் கடைப்பிடிக்கிறார். பிரதமர் மோடி மவுனமாக இருப்பதற்கு மூன்று கார ணங்கள் உள்ளன. ஒன்று மாநில அரசின் தோல்வி. இரண்டாவது, உள்துறையின் தோல்வி. மூன்றா வது, தேசிய பாதுகாப்பில் ஏற்பட்ட தோல்வி. எனவே, தான் தவறு செய்ததை ஏற்க மறுக்கிறார்.
பிரதமர் மணிப்பூர் செல்லாதது ஏன்?
மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். இந்தியா கூட்ட ணியும் சென்றது. ஆனால், இது வரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது ஏன்? பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து பேச 80 நாட்கள் எடுத்து கொண்டது ஏன்? அதானி விவகாரம் குறித்து பேசும் போதும் பிரதமர் மோடி அமைதி யாக இருந்தார் (அப்போது பாஜக-வினர் கத்தி கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்). நான் அதானி பெயரை எடுத்ததும் இங்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சீனா ஆக்கிரமிப்பு பற்றி பேசும்போதும் பிரதமர் மவுனமாக இருந்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி, ஜி ஜின்பிங்கிடம் என்ன பேசினார் என்பதும் வெளியே தெரிவிக்கப்பட வில்லை’’ என்று கவுரவ் கோகோய் கூறினார். அப்போது, பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுந்து, எனக்குத் தெரிந்தவரை, கோகோய்க்குப் பதிலாக ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் உரையை தொடங்கி வைத்து பேசுவார் என்று சபாநாயகர் அலுவலகத்திற்கு காலை 11.55 மணிக்கு கடிதம் வந்தது. ஆனால் ஏன் ராகுல் பேசவில்லை? ஐந்து நிமிட இடைவெளியில் என்ன நடந்தது? என்ன பிரச்சனை? ராகுல் காந்தியின் பதிலைக் கேட்க நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்என்றார். அதற்குப் பதிலளித்த கவுரவ் கோகோய், “ராகுல் எழுதிய கடி தத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர் களா? சபாநாயகர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்களும் வெளியே விடட்டுமா? சபாநாயகர் அலுவலகம் என்ன கோரிக்கைகளை பெறுகின்றன என்பதை நாங்களும் வெளியே சொல்லட்டுமா? சபாநாய கர் இந்த நாடாளுமன்றத்தின் பாது காவலர். ஆனால், சபாநாயகர் அலு வலகத்தில் பிரதமர் பேசியதை எல்லாம் நாங்கள் வெளியிட வேண்டுமா?” என்று கிலியை ஏற்படுத்தினார்.
அமித்ஷா ஆத்திரம்
இதனை அதிர்ச்சியடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கையிலிருந்து கோபமாக எழுந்து, “கோகோய் சொல்வது தீவிரமான விவகாரம். அவர் என்ன இப்படிப் பேசுகிறார்? முடிந்தால் பிரதமர் மோடி சபாநாயகருடன் என்ன பேசினார் என்பதை வெளியே விடுங்கள். மோடி பெயரை இப்படி கோகோய் பயன்படுத்த முடியாது. இப்படி ஆதாரமற்று பேசக் கூடாது” என்று ஆத்திரத்தைக் காட்டினார். இதையடுத்து, அமித்ஷாவுக்கு பதிலளித்த கோகோய், “ஒட்டுமொத்த அவையும் மணிப்பூர் பக்கம் உள்ளது என்பதை காட்ட வேண்டும். அதானி குறித்து பேசினால் பாஜகவினர் கூச்சலிடுகிறார்கள் என்றால் இது யாருக்கான அரசு? நான் பிரதமர், முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் பற்றி பேசும் போது யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், நான் அதானியைப் பற்றிப் பேசும்போது மட்டும் பாஜக எம்.பி.க்கள் ஏன் கோபத்துடன் நின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமரே, அவைக்கு வாருங்கள்!
தொடர்ந்து பேசிய கவுரவ் கோகோய், “இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இது பலத்தை நிரூபிப்பதற்கான தீர்மானம் அல்ல. இது மணிப்பூருக்கான நீதியைப் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம். பிரதமரின் மவுன விரதத்தைக் கலைக்கவே நாங்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் மணிப்பூர் சென்று கள நிலவரத்தை அறிந்து வந்துள்ளோம். பிரதமர் அவர்களே நீங்களும் மணிப்பூர் சென்றுவிட்டு கள நிலவரம் அறிந்து கொண்டு வந்து இங்கே பதிலுரை ஆற்றுங்கள் என்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி தனது இரட்டை என்ஜின் அரசின் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். அரசின் தோல்வி காரணமாகவே மணிப்பூரில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். 5000 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 6500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்திருக்க வேண்டும். கல வரம் தொடங்கிய 2 அல்லது 3 நாட்களில் அவர் அமைதியை நிலை நாட்டியிருக்க வேண்டும். மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது என்றால், அதற்கு ஒன்றிய அரசின் மீது நம்பிக்கை யில்லை என்றுதானே அர்த்தம்” என்று குறிப்பிட்டார்.
சம்மந்தமில்லாமல் பேசிய பாஜக எம்.பி.,
கவுரவ் கோகோயைத் தொடர்ந்து, பாஜக சார்பில் நிஷிகாந்த் துபே பேசி னார். அப்போது, காங்கிரஸ்- சீனா தொடர்புகள் குறித்து திங்களன்று நிஷி காந்த் துபே பேசியதை முன்வைத்து காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். அமளிக்கு இடையே தொடர்ந்து பேசிய நிஷிகாந்த் துபே, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநில விவகாரங்களில் காங்கிரஸ் நிலைப்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பினார். “ராகுல் காந்தி இன்று பேச தயாராக இல்லை அல்லது தாமத மாக தூங்கி எழுந்திருப்பார்” என்று கேலிசெய்த அவர், “கவுரவ் கோகோய் நன்றாக பேசினார்” எனக் குறிப்பிட்டு, மணிப்பூர் விவகாரத்திற்குள் பெரிதாக செல்லாமல், “ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை தான் விதித்துள்ளது;
இறுதித் தீர்ப்பு வழங்கவில்லை; மன்னிப்பு கேட்க தானொன்றும் சாவர்க்கர் இல்லை என்று ராகுல் கூறுகிறார்: ராகுல் ஒரு போதும் சாவர்க்கர் ஆக முடியாது” என்று சம்பந்தமில்லாமல் பேசி முடித்தார். அவரைத் தொடர்ந்து, திமுக சார்பில் டி.ஆர். பாலு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சவுகதா ராய், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சி சார்பில் டிம்பிள் யாதவ், சிவசேனா சார்பில் அரவிந்த் சாவந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முகம்மது ஆரிப், காங்கிரஸ் சார்பில் மணீஷ் திவாரி, விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் சார்பில் தொல். திருமா வளவன் ஆகியோர் நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக, பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர்கள் நாராயண் ரானே, கிரண் ரிஜிஜூ, ஹரியானா பாஜக எம்.பி. சுனிதா தக்கால், பிஜூ ஜனதாதளம் சார்பில் பினாகி மிஸ்ரா ஆகியோர் பேசினர். அகாலிதளம் (எம்) எம்.பி. சிம்ரன்ஜித் சிங் மான், மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் பெருந்துயரைத் தருகின்றன என்று பேசினார். மாலை 6 மணிவரை விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அவை மீண்டும் புதனன்று காலை 11 மணிக்குக் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் புதன்கிழமையன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.