பெங்களூரு, டிச.27- இந்துக்கள் தங்கள் எதிரிகளைக் கொல்ல வீட்டில் ஆயுதங்களைக் கூர்மைப் படுத்த வேண்டும் என்று பிரக்யாசிங் தாக்கூர் கொலைவெறியுடன் பேசியுள்ளார். “தன் பெருமையைத் தாக்குபவர்களுக்கு எதிராக ஒவ்வொரு இந்துவுக்கும் தன்னை பாது காத்துக் கொள்ள உரிமை உண்டு.” என்று கர்நாடகத்தின் ஷிவமோகாவில் நடந்த இந்துத்வா ஜாகரண வேதிகே என்ற தீவிரவாத இந்து அமைப்பின் தென்பகுதி மாநாட்டில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான பிரக்யாசிங், பகிரங்கமாக கலவரத்திற்கு அழைப்பு விடுத்தார். சிறுபான்மையினருக்கு எதிராக தீவிர வகுப்புவாத வெறுப்பையும் அவர் கக்கினார். “அவர்களுக்கு ஜிஹாத் மரபு உண்டு. லவ் ஜிஹாத்தில் ஈடுபடுபவர் களுக்கு அதையே பதிலாகச் சொல்ல வேண்டும். வீட்டுக்குள் அத்துமீறி நுழை பவர்களுக்கு சூடான பதிலடி வழங்குவது நமது உரிமை. காய்கறி வெட்டும் கத்தியால் தலையையும் வெட்டலாம்” என்று அவர் கொக்கரித்தார்.
மிஷனரி நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வைப்பது தேசத்தின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றும் அவர் புலம்பினார். பத்து பேரின் உயிரைப் பறித்த மாலே கான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போபால் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரான பிரக்யாசிங் தாக்கூர், ‘பிறர் உதவியின்றி நடக்க முடியாது’ என்று கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், அவர் கபடி விளையாடுவதும் நடனமாடுவதும் காட்சிகளாக ஏற்கனவே வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்க்கரே, மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்ததற்கு தனது சாபமே காரணம் என்றும் பிரக்யாசிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.