பெங்களூரு, டிச. 27- பாஜகவின் ரூ.40 ஆயிரம் கோடி ஊழலை வெளிப்படுத்துவேன் என்று கர்நாடகா பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு பாஜக மாநிலத் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக பாஜகவிற்குள் பல்வேறு மோதல்கள் நடக்கின்றன. பசனகவுடா பாட்டீல் யத்னால் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏ-க்கள் அக்கட்சிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதனன்று பசனகவுடா பாட்டீல்,”தன்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் கடந்த பாஜக ஆட்சியில் கொரோனா கால கட்டத்தில் 40,000 கோடி ரூபாய் அள விற்கு ஊழல் செய்தவர்களின் பெயர் களை வெளிப்படுத்துவேன்” என கூறி யுள்ளார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறிய தாவது, “கொரோனா முதல் அலையின் போது 40,000 கோடி ரூபாய் வரை எடியூரப்பாவின் தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் ஊழல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை ரசீது (பில்) போடப்பட்டுள்ளது. முடிந்தால் பாஜக என்னைக் கட்சியிலிருந்து நீக்கட்டும். அப்படி நீக்கினால் யார், யார் எவ்வ ளவு ஊழல் செய்து சொத்துக்கள் வாங்கியுள்ளனர் எனப் பெயர்களை உடனடியாக வெளியிடுவேன். யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல, திருடர்கள் திருடர்கள் தான்” எனத் தெரிவித்து பாஜகவை கதிகலங்க வைத்துள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டது. அனைத்து திட்டங்களுக்கும் 40 சதவீதம் வரை கமிஷன் வழங்க வேண்டும் என நிர்பந்தப்படுத்துவதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. பாஜக மீது காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டி இருந்தது. தற்பொழுது பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னாலின் கருத்து மூலம் அது நிரூபணமாகி யுள்ளது.
10 மடங்கு ஊழல்
பாஜக எம்எல்ஏ பசனகவுடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகை யில்,”பாஜக எம்எல்ஏவின் இந்த குற்றச்சாட்டு மூலமாக தாங்கள் வைத்த புகார்கள் உண்மை என்பது தெளிவாகி யுள்ளது. அவரது குற்றச்சாட்டுகள் மூலமாக தாங்கள் கணக்கிட்டதை விட 10 மடங்கு அதிக அளவில் ஊழல் நடை பெற்றுள்ளது” என அவர்கூறியுள்ளார்.