சண்டிகர், ஜூன் 15 - விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து ஹரியானா பாஜக அரசு சூரிய காந்தி விதைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தர ஒப்புக்கொண்டது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதில் பாஜக அரசு மிகமோசமான அணுகுமுறையை கடைபிடித்து வருவதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா அரசுக்கு ஜூன் -5 ஆம் தேதி வரை விவசாயிகள் கெடுவிதித்திருந்த நிலையில் குர்னாம் சிங் சாருனி உள்ளிட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்களை பாஜக அரசு கைது செய்தது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குருச்சேத்திரா மாவட்டம் பிப்பிலியில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடைபெற்றது. இந்த மகாபஞ்சாயத்தில் ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்றனர்.
பேச்சு வார்த்தைக்கு அரசுப் பிரதிநிதிகள் யாரும் வராததால் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் (NH- 44) மாபெரும் மறியலில் ஈடுபட்டனர். “அடிப்படை ஆதரவு விலை கொடுக்கும் வரை நாங்கள் போராட்டத்தை திரும்பபெற மாட்டோம்.இந்த சாலை எவ்வளவு நேரம் முடக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அரசே முடிவு செய்து கொள்ளட்டும்” என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர். பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இது நாம் இணைந்து போராடுவதற்கான நேரம் என்று தனது ஆதரவை தெரிவித்திருந்தார். (மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை கலைப்பதற்கு அமித்ஷாவின் தில்லி காவல்துறை முயன்றபோது அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது). இடைவிடாமல் வலுவான முறையில் தொடர்ந்த விவசாயிகள் போராட்டத்தின் விளைவாக ஜூன் -14 புதனன்று சூரிய காந்தி விதைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டால் 6500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் கைது செய்யப்பட்டுள்ள விவசாய சங்க தலைவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அரசுத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.