பெங்களூரில் உள்ள உணவக விடுதியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் சேஷாத்திரிபுரம் பகுதியில் ஜெகதீஷ் உணவக விடுதி உள்ளது. அங்கு உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஜரீனா(37) என்ற பெண் அறை எடுத்துத் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் ஜரீனா தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்வதற்காக, ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் ஜரீனா கதவைத் திறக்கவில்லை. இதனால் பதில் அறையின் மற்றொரு சாவியைக் கொண்டு கதவைத் திறந்தபோது ஜரீனா இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக விடுதியின் மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஜரீனா சுற்றுலா விசாவின் அடிப்படையில் பெங்களூர் வந்தது தெரிய வந்துள்ளது. சாட்சியங்களின்படி அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்து வருகின்றனர். இதையடுத்து தடய அறிவியல் ஆய்வகக் குழு சம்பவ இடத்திற்கு வந்து அறை முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ஜரீனா தங்கியிருந்த அறைக்கு வேறு யாரேனும் வந்தார்களா என சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.