ஆல்ட் நியூஸ் நிறுவனர் முகமது ஜூபைர் மேலும் சிறையில் இருப்பது நியாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்துப் பேசிய விவகாரத்தில் அவருக்கு எதிராகக் கண்டனங்களை எழுப்பி, முகமது ஜுபைர் தன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து மதரீதியாக மக்களின் மனதைப் புண்படுத்தியதாகக் கூறி ஆல்ட் நீயூஸ் என்னும் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜுபைர் (Mohamed Zubair) டெல்லியில் கைது செய்யப்பட்டார். முகமது ஜுபைர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாக ட்விட்டர் பயனாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு 2018-ம் ஆண்டு ஜுபைரால் ட்விட்டரில் பதியப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர், "ஜுபைரால் பதியப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பதிவு ஒரு மதத்தினரைக் காயப்படுத்துவதாகவும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது. அந்த வெறுப்புணர்வு சமூகச் சீர்கேட்டை ஏற்படுத்தலாம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை சமயத்தில் போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் தற்போது ஜுபைரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ், ஜாஜியாபாத், முசாபர்நகர், லக்கீம்பூர் சீத்தார்பூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் பதியப்பட்ட 6 தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக்கோரி முகமது ஜூபைர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் 6 வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழக்க கோரியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 6 வழக்குகளிலும் ஜூபைருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் உத்திரபிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த 6 வழக்குகளும் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும். கடந்த 2018ம் ஆண்டு பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவிற்கான டெல்லி காவல்துறை கைது நடவடிக்கையில் பாட்டியாலா நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அதே பதிவிற்காக வேறு காவல்நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகள் காரணமாக ஜூபைர் இன்னும் சிறையில் இருப்பது நியாயம் இல்லை என கருதுகிறேன். இது பாட்டியாலா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தடுப்பது போல இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்கி இந்த வழக்குகளை தில்லி காவல்துறைக்கு மாற்றுகிறேன் அவரை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிடுகிறேன்" மேலும் முகமது ஜுபைர் இனி டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை வெளியிடக் கூடாது என எங்களால் கூற என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.