ஒன்றிய அரசு, கொண்டுவர உத்தேசித்துள்ள ‘அக்னிபத் திட்டத்தை’க் கிழித்தெறிய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நாட்டின் நலன்களுக்குக் கேடுபயத்திடும் அக்னிபத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுதிபட ஏற்கவில்லை. நான்கு ஆண்டு காலத்திற்கு ‘ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தினரைத்’ தேர்வு செய்வதன் மூலம் தொழில்முறை ராணுவத்தினரை உருவாக்கிட முடியாது. ராணுவத்தினரின் ஓய்வூதியப் பணத்தைச் சேமிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டம் தொழில்முறை ராணுவத்தினரின் தரத்தையும், திறமையையும் மிக மோசமாக சமரசம் செய்திடும்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே இந்திய ராணுவத்திற்கு ஆட்கள் தெரிவுசெய்யப்படவில்லை. ராணுவத்திற்கு வழக்கமாக ராணுவத்தினரைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக, இந்தத் திட்டமானது நான்கு ஆண்டு காலத்திற்குப் பின்னர் அவர்களுக்கு எதிர்காலத்தில் எவ்விதமான வேலைவாய்ப்பு உத்தரவாதமுமின்றி, ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைத் தெரிவு செய்கிறது. இது ஓர் ஆபத்தான நிலையை உருவாக்கிடும். அதன்பின்னர் அவர்கள் தனியார் நடத்திடும் சேனைகளுக்கு வேலை செய்ய இழுத்துச் செல்லப்படலாம். இது ஏற்கனவே கடுமையான நிலைக்கு இட்டுச்சென்றுள்ள நம் சமூகக் கட்டமைப்பை மேலும் அபாயகரமான ஆபத்துக்களுக்குத் தள்ளிவிடும்.
குறைந்தபட்ச அளவிற்குக்கூட வேலை பாதுகாப்பு இன்றி ஓர் உச்சபட்ச தியாகத்திற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று இளைஞர்களை அறைகூவி அழைப்பது கிரிமினல்தனமானதாகும். இதற்கெதிராக நாடு முழுதும் தன்னிச்சையாக எழுந்துள்ள கிளர்ச்சிப் போராட்டங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக எழுந்துள்ள கோபத்தைப் பிரதிபலிக்கிறது.
‘அக்னிபத்’ திட்டம் உடனடியாகக் கிழித்தெறியப்பட வேண்டும் என்றும், ராணுவத்திற்கு வழக்கமாக எப்போதும் ஆட்களைத் தேர்வு செய்வதுபோலவே தேர்வு செய்ய வேண்டும் என்றும் இதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.