‘நீட்’ தேர்வு மையங்களில் தேர்வு எழுதவரும் மாணவிகள் கண்ணியமற்ற முறையில் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மாலினி பட்டாச்சார்யாவும், பொதுச் செயலாளர் மரியம் தாவ்லேயும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆயிரூர் தேர்வு மையத்தில் ‘நீட்’ தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் மிகவும் கண்ணியமற்ற முறையில் சோதனை செய்யப்பட்டிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் சீற்றத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. மாணவிகள் சோதனை செய்யப்படும்போது, அவர்கள் தங்களுடைய உள்ளாடைகளையெல்லாம் அவிழ்த்துக் காட்டுமாறு பணிக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாததாகும். இதனால் மாணவிகள் மிகவும் அவமானத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகி மிகவும் கடுமையான முறையில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக ஒரு மாணவியின் பெற்றோர் காவல்துறையினரிடம் முறையீடு பதிவு செய்துள்ளார்கள். கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, இந்நிகழ்ச்சி மீது கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்கிறார், ‘நீட்’ தேர்வை நடத்திவரும் தேசிய ஆய்வு ஏஜன்சி (National Testing Agency) தலைவருக்கும், ஒன்றிய கல்வி அமைச்சருக்கும் இந்த சம்பவத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தை தேசிய ஆய்வு ஏஜன்சி முக்கியமானதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டில் அனைத்து நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கும் தேசிய ஆய்வு ஏஜன்சி பொறுப்பினைப் பெற்றிருக்கிறது. தேசிய ஆய்வு ஏஜன்சியால் ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து தேர்வு மையங்களும் மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள்/கல்லூரிகள் (unaided schools/colleges) ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரு பெண்கள், கல்லூரியின் ஊழியர்களாவர். மற்ற மூவரும் ஸ்டார் செக்யூரிட்டி ஏஜன்சி நிறுவனத்தின் ஊழியர்கள். அனைவரையும் தேசிய ஆய்வு ஏஜன்சி நியமனம் செய்திருக்கிறது.
நாடு தழுவிய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளின்போது, தேர்வு எழுத வரும் மாணவர்களின், அதிலும் குறிப்பாக மாணவிகளின், கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தும் விதத்தில், பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாக மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.