states

img

அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்திட வேண்டும்-பி.ஆர்.நடராஜன் தாக்கல்

அங்கன்வாடி ஊழியர்கள் ஜூலை 26 முதல் நாடாளுமன்ற வீதியில் மகாமுற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  மக்களவையை ஒத்திவைத்து அது தொடர்பாக விவாதித்திட வேண்டுமென்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் ஒத்திவைப்புத்தீர்மானத்திற்கான அறிவிப்பை இன்று (புதன்கிழமை) அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவை சபாநாயகரிடம்,  பி.ஆர். நடராஜன், ஓர் ஒத்திவைப்புத்தீர்மானத்திற்கான அறிவிப்பை அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாடு முழுதும் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்களும் உதவியாளர்களும் ஊட்டச்சத்தின்றி வாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாடு சுதந்திரம் பெற்ற 75ஆவது ஆண்டை “அம்ரித் மகோத்சவ்” என்று சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், நாடு முழுதும் சுமார் 27 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் (இவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது) கோரிக்கைகளை ஒன்றிய அரசாங்கம் கிஞ்சிற்றும் கண்டுகொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. 2022 ஏப்ரல் 25 அன்று உச்சநீதிமன்றம், அங்கன்வாடி ஊழியர்களையும் உதவியாளர்களையும் தொழிலாளர்களாகப் பாவித்து, பணிக்கொடை உட்பட தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை  அளித்திட ஒன்றிய அரசாங்கம் பரிசீலித்திட வேண்டும் என்றும் அவர்கள் தற்போது மதிப்பூதியம் என்ற பெயரில் வாங்கிவருவதை ஊதியமாக்கிடப் பரிசீலித்திட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. மேலும் அவர்களுக்கு சிறந்த பணிநிலைமைகளை ஏற்படுத்தித்தரவும் வழிவகைகளைக் காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பில் கோரியிருந்தது.
எனவே, இந்த அவையின் நிகழ்ச்சிநிரலை ஒத்திவைத்து அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சனை குறித்து விவாதித்து தீர்வு கண்டிட வேண்டும் என்று கோரி இந்த அறிவிப்பை அளிக்கிறேன்.
இவ்வாறு பி.ஆர்.நடராஜன் அறிவிப்பினை அளித்துள்ளார்.