states

img

தேசிய பளுதூக்கும் போட்டி:  பதக்கம் வென்ற ஆட்டோ  ஓட்டுநர்

 புதுச்சேரி, ஏப்.13- தேசிய அளவில் பளு தூக்கும் போட்டி கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், மாஸ்டர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 36 வீரர்கள் பங்கேற்றனர்.
தங்கப் பதக்கம்
215 கிலோ எடை தூக்கும் மாஸ்டர் சாம்பியன்ஷிப் ஸ்குவாட் பிரிவில் புதுச்சேரி ஆட்டோ ஓட்டுனரும், சிஐடியு புதுவை பிரதேச ஆட்டோ சங்க தலைவருமான மது (எ) லிங்கேசன் வேலு தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். அதேபோல் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளிலும் புதுச்சேரியைச் சேர்ந்த வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றுள்ளனர். ஓட்டுநர் மது (எ) லிங்கேசன் வேலு, சிஐடியு புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகர குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.