புதுச்சேரி, ஜன. 31- புதுச்சேரி மின் துறை தனியார்மயத்தை கண்டித்து திட்டமிட்டபடி செவ்வாயன்று (பிப். 1) வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்துறை போராட்டக்குழு அறிவித்துள்ளது. யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முடிவெடுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது. புதுவை மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவை உருவாக்கி தனியார் மயத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. போராட்டக்குழுவினர் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்தனர்.
என்.ஆர்.காங்.-பாஜக மீது சிபிஎம் சாடல் |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ ஒன்றிய பாஜக அரசு, புதுச்சேரி மக்களின் சொத்தான மின் துறையை தனியார் நிறு வனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய துடித்துக்கொண்டு இருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். மின்துறைக்கு ஆபத்து ஏற்பட்டபோது முந்தைய காங்கிரஸ் அரசு அதை எதிர்த்து பல தீர்மானங்களை முன்மொழிந்தது. அதனை என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. ஆனால், தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தனது முந்தைய நிலைக்கு மாறாக மிக வேகமாக தனியார்மய நடவடிக்கையை செயல்படுத்துவது வெட்கக் கேடானது என்றும் கூறியிருக்கிறார். மாநில அரசு தன்னுடைய மவுனத்தை கலைத்து மின் துறையை தனியார் மயமாக்குவதை தடுத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மின் துறை தனியார்மயம் நட வடிக்கை என்பது ஒட்டுமொத்த மாநில மக்களின் நலனை காவு வாங்கக் கூடிய செயலாகும். எனவே, மின்துறை தனியார்மய நடவடிக்கையை முறியடிக்க ஜன நாயக மதசார்பற்ற கட்சிகள் ஒன்று படவேண்டும் என்றும் ராஜாங்கம் கேட்டுக்கொண்டுள்ளார். |
இதனிடையே தனியார் மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டக்குழுவினர் செவ்வாய்க்கிழமை முதல் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். போராட்டத்தை தடுக்க தொழிலாளர் தாவா சட்டத்தின் கீழ் மின் துறையை அத்தியாவசிய பணிகள் துறையாக அரசு அறிவித்துள்ளது. மிரட்டும் அதிகாரிகள் இதுகுறித்து மின்துறை தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்துறை ஊழியர்கள் அத்தியாவசிய பணிகளை செய்பவர்கள். அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பணி விதிகளுக்கு எதிரானது. எனவே வேலைநிறுத்தத்தை கைவிடும்படி துறைரீதியாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மீறி போராட்டம் நடத்தினால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த காலம் பணியிடை முறிவு காலமாக கருதப்பட்டு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. எனவே வேலை நிறுத்தத்தை கைவிட்டு வழக்கம் போல பணிகளை செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாடம் புகுட்டுவோம்!
இந்நிலையில் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் தொடங்கும் என மின்துறை போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கூறுகையில்,“மின்துறை ஊழியர்களின் போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. புதுவை மக்களின் போராட்டம். எங்கள் போராட்டத்துக்கு ஆளும்கட்சியை தவிர்த்து அனைத்து அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், இயக்கங்களும் முழு ஆதரவு அளித்துள்ளன. முதலமைச்சரும், அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் மட்டும்தான் மவுனம் சாதித்து வருகின்றனர்” என்றனர்.
மக்களுக்கு வேண்டுகோள்!
மின்துறை தலைவர் தனியார்மயமாக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளார். தனியார் மயமானால் துரித சேவை கிடைக்கும் என்கிறார். இதுவரை துரிதசேவை கிடைக்கவில்லையா? எங்களை போராட்டத்திற்கு அரசுதான் தள்ளியுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தின் போது ஒட்டுமொத்த ஊழியர்களும் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஒன்று கூடுவோம். ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம். இதனால் ஏற்படும் மின் இடர் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசும், மின்துறை நிர்வாகமும்தான் பொறுப்பு. திட்டமிட்டபடி செவ்வாயன்று தொடங்கும் போராட்டம், தீர்வு காணும்வரை நீடிக்கும். எங்களின் நியாயமான போராட்டத்துக்கு மின் நுகர்வோர், அரசு ஊழியர், அரசியல் கட்சியினர் ஆதரவு தரும்படி கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் அவர்கள் விடுத்தனர்.