புதுச்சேரி, அக். 12- புதுச்சேரியில் நடப்பாண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 79 வழக்குகள் செப்டம்பர் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குழந்தை திருமணம் தொடர்பாக 9 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்றாண்டுகளை விட இம்முறை போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின்படி பதிவாகும் வழக்குகள் புதுச்சேரியில் கடந்த 2019இல் 41, 2020இல் 46, 2021இல் 65 ஆக பதிவானது. நடப்பாண்டில் செப்டம்பர் வரை, போக்சோ சட்டத்தின் கீழ் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த வழக்குகளில் 59 வழக்குகள் புதுச்சேரி, மாகே மற்றும் ஏனாம் பகுதிகளை உள்ளடக்கிய காவல் நிலைய எல்லைக்குட்பட்டது. 59 வழக்குகளில் 33 வழக்குகள் கடத்தல் தொடர்பானவை. இது கடந்த 3 ஆண்டுகளை விட அதிகம். அதேபோல் குழந்தை திருமணங்கள் 2019இல் ஒன்றாக இருந்தது. 2020 மற்றும் 2021இல் பூஜ்யமாக இருந்தது. நடப்பாண்டு செப்டம்பர் வரை 9 குழந்தை திருமணங்கள் வழக்கு பதிவாகியுள்ளன. கொரோனா தொற்றுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழலே இதற்கு முக்கியக் காரணம் என்றும், கொரோனாவுக்குப் பிறகு பொருளாதார ரீதியான பிரச்சினைகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.