பீகார் மாநிலம் முரளிகஞ்ச் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும், நில மாபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவருமான தோழர் ராஜேஷ் ஹன்ஸ்தாவை அக்டோபர் 25 அன்று நில மாபியா குண்டர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் நிகழ்ந்து 2 மாதத்தை கடந்துவிட்ட நிலையில், கொலையாளிகளை கைது செய்யாமல் பீகார் மாநில காவல்துறை அலட்சியமாக உள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று முரளிகஞ்ச் அருகே ரஜினி நகரில் ராஜேஷ் ஹன்ஸ்தாவை கொலை செய்த மாபியா கும்பலை உடனடியாக கைது செய்யக் கோரி சிபிஐ(எம்) ஊழியர்கள், பொதுமக்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் சிபிஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர் அவதேஷ் குமார், பீகார் மாநில சிபிஐ(எம்) சட்டமன்ற கட்சி தலைவர் அஜய் குமார் உள்ளிட்டோர் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.