நாகலாந்து பொதுமக்கள் படுகொலை விவகாரத்தில் ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 14 பொதுமக்கள் கொல்லப்பட வழக்கில் ராணுவத்தினருக்கு எதிரான அம்மாநில காவல்துறையின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆயுதப்படை (சிறப்பு 4 அதிகாரங்கள்) சட்டம், 1958 இன் பிரிவு 6 இன் கீழ் தேவைப்படும் முந்தைய அனுமதியைப் பெறப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ள ராணுவ அதிகாரிகளின் மனைவிகள் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள்மீது பதிலளிக்க ஒன்றிய அரசு, நாகாலாந்து அரசு உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொதுமக்கள் கொல்லப்பட்ட வழக்கில் 21 பாரா சிறப்புப் படையைச் சேர்ந்த 30 பேர்மீது நாகாலாந்து காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் இராணுவக் குழுமீது கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த நபர்களுக்கு எதிராக டிசம்பர் 5 ஆம் தேதி மாநில குற்றப்பிரிவு காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் காவல்துறை ஒப்படைத்தது.
21 பாரா சிறப்புப் படையின் செயல்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 2 சுபேதார்கள், எட்டு ஹவில்தார்கள் உள்ளிட்ட 30 ராணுவ வீர்ர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யபப்ட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராணுவத்தினருக்கு எதிரான நாகாலாந்து காவல்துறையினரின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.