ஹைதராபாத்,டிச.24- ஓலா, உபேர் உள்ளிட்ட வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் உள்ள கிக் தொழிலாளர்களுக்கு ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டு திட்டத்தையும் 10 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை திட்டதையும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
டிசம்பர் 23, சனிக்கிழமையன்று நம்பள்ளி கண்காட்சி மைதானத்தில் ஓலா, உபேர் உள்ளிட்ட வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், உணவு விநியோக தொழி லாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களு டன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்த சமூகப் பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
அமைப்புசாரா தொழிலாளர்களாக ஆன்லைன் தளத்தின் மூலம் இணைந்து பணியாற்றி வரும் கிக் தொழிலாளர்கள், நிரந்தரமான அடிப்படை வருமானம் இன்றியும், சமூக பாதுகாப்பின்றியும் தாங்கள் பணியாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் தொடர் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னதாக கிக் தொழிலாளர்களுக்காக ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தையும் கொள்கைகளையும் தெலுங்கானா அரசு ஆய்வு செய்து, அடுத்த மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் தொழிலாளர்களுக்கு பயனுள்ள வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் என்றும் ரேவந்த் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஓட்டுநர்களின் நலனுக்காக, சிறப்பு செயலியை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டிச., 28 முதல் 2024 ஜனவரி 6, வரை நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் டிஜிட்டல் வடிவிலோ அல்லது எழுத்து வடி விலோ தகுதியுள்ள தொழிலாளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ள கிக் தொழிலாளர்கள் அதிக பணிநேரம்,இலக்கு வைத்து பணிபுரிய நிர்ப்பந்திப்பது, மற்றும் குறுகிய நேரத்தில் வாடிக்கையாளர் சேவையை நிறைவேற்ற நிப்பந்திப்பது உள்ளிட்ட காரணங்களால் விபத்து, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் நாய் துரத்தியதால் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார். ஆனால் அவருக்கு அவர் பணியாற்றிய நிர்வாகம் முறையான இழப்பீடு வழங்கவில்லை மற்றும் முந்தைய டி.ஆர்.எஸ். அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை.
இந்நிலையில் மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ள இந்த விபத்து காப்பீட்டு திட்டம் தொழிலாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.