தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றுக்கொண்டார். துணை முதலமைச்சராக பத்தி விக்ரமார்கா பதவியேற்றுக்கொண்டார்.
தெலங்கானாவில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றிபெற்று முதன்முறையாக, பி.ஆர்.எஸ் கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதை அடுத்து ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், அவரோடு 11 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றுக்கொண்டார். துணை முதலமைச்சராக பத்தி விக்ரமார்கா பதவியேற்றுக்கொண்டார். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இவர்களோடு, உத்தம் குமார் ரெட்டி, கோமதிரெட்டி, வெங்கட் ரெட்டி, சீதக்கா, பொன்னம் பிரபாகர், ஸ்ரீதர் பாபு, தும்மல நாகேஷ்வர் ராவ், கொண்டா சுரேகா, ஜூபாலி, கிருஷ்ணா பொங்குலேட்டி ஆகிய 10 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகராக, கதம் பிரசாத் குமாரை காங்கிரஸ் தேர்வுசெய்திருக்கிறது.