புதுதில்லி, மே 29- தஞ்சாவூரிலிருந்து சுய உதவிக் குழுவினர் அனுப்பிய “தலையாட்டி பொம்மை” தமக்குக் கிடைத்தாகவும். அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மோடி கூறினார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது வழக்கம். இந்த மாதம் கடைசி ஞாயிறு மே 29-ஆம் தேதி மோடி பேசியதாவது: தமிழகத்தின் தஞ்சாவூரிலிருந்து சுய உதவிக் குழுவினர் எனக்கு புவிசார் குறியீடு கொண்ட தஞ்சாவூர் பொம்மையை பரிசா அனுப்பினர். உள்ளூர் கலாச்சாரம் நிறைந்த இந்த பரிசை எனக்கு அனுப்பியதற்கு தஞ்சாவூர் சுய உதவிக் குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த தஞ்சாவூர் பொம்மை அழகாக இருப்பது மட்டுமின்றி, பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு புதிய சகாப்தத்தை எழுதுகிறது. இந்த மகளிர் சுய உதவி குழுக்கள் தஞ்சாவூரில் மிக முக்கியமான இடங்களில் கைவினைப்பொருள் விற்பனை அங்காடியை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், கைவினைஞர்கள் புத்துணர்ச்சி பெறுகின்றனர். பெண்களின் வருமானமும் உயர்கிறது. மக்கள் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், சுய உதவிக் குழுக்களின் வருமானத்தை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், ‘தன்னம்பிக்கை இந்தியா பிரச்சாரத்திற்கு உத்வேகமும் கிடைக்கும் என்றார்.