குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள், விவசாயிகள் தில்லியை நோக்கி இரண்டாம் கட்ட போராட்டத்தை நடத்தினர். ஏதோ அண்டை நட்டு எல்லைப் பிரச்சனையில் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்று, தில்லி எல்லையில் தடுப்புகளை அமைத்து மோடி அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை மற்றும் ஹரியானா பாஜக அரசின் காவல்துறை, துணை ராணுவப்படை ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூரத் தாக்குதலில் 3 விவசாயிகள் உயிரிழந்த நிலையில், பல நூறு விவசாயிகள் படுகாயமடைந்தனர். விவசாயிகள் மீதான இந்த மோசமான அடக்குமுறைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் இதற்கான விலையை பாஜகவினர் வெளிப்படையாக அனுபவித்து வருகின்றனர்.
மோடியின் பெயரைக் கூறியதால் தாக்குதல்
விவசாயிகள் மீதான மோடி அரசின் அடக்குமுறையை கண்டித்து ஹரியானா மாநிலத்தில் பாஜகவினர் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாஜகவினர் நுழையக் கூடாது என எச்சரிக்கை போஸ்டரும், பெயர் பலகையும் வைத்துள்ளனர். கடந்த வாரம் ஹரியானாவின் தில்லி எல்லைப் பகுதி கிராம மக்கள் பாஜக வேட்பாளரின் பிரச்சார வாகனம் தாக்கப்பட்டு, வாகனத்தில் இருந்த பிளக்ஸ் படங்களை கிழித்தெறிந்தனர். இதன் தொடர்ச்சியாக சிர்சா மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளரான அசோக் தன்வார், சிர்சா புறநகர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது அவரது வாகனத்தை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வழிமறித்து, “இங்கு எதற்கு வந்தீர்கள்?” என கேள்வி கேட்டு கோஷங்களை எழுப்பினர். உடன் வந்த பாஜகவினர் “மோடி, மோடி” என பதிலுக்கு கூச்சல் போட்டனர். மோடியின் பெயரை கூறியவுடன் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விவசாயிகள் தடிகளை வைத்தும், கற்களை கொண்டும் அசோக் தன்வார் அமர்ந்து இருந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அசோக் தன்வாரின் வாகனம் சேதமடைந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் உதவியால் அவர் சம்பவ இடத்தில் இருந்து உயிர்பிழைத்தால் போதுமென்று தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். இதனால் ஹரியானா மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள தயக்கம் கொண்டு வீட்டிலேயே பாஜக வேட்பாளர்கள் முடங்கியுள்ளனர்.
கூட்டாளி மீதும் தாக்குதல்
பாஜக மட்டுமல்லாது, பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் துஷ்யந்த் சவுதாலா ஹரியானா மாநிலத்தின் ஒரு கிராம பகுதியில் தடுக்கப்பட்டு வந்த வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டார். 10 மக்களவை தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என தகவல் வெளியாகி வரும் நிலையில், மேற்குறிப்பிட்ட சம்பவங்களால் பாஜகவிற்கு பலத்த அடி கிடைக்கும் என கூடுதல் தகவல் வெளியாகி வருகின்றன.