நாடாளுமன்ற கூட்டத் தொடரினை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு செவ்வாயன்று கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துக்கு காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே புதனன்று பதில் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “ஒரே நாளில் எதிர்க்கட்சிகளை (இந்தியா கூட்டணி) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடனும், தீவிரவாத குழுக்களுடனும் பிரதமர் ஒப்பிட்டு பேசுகிறார். அதே நாளில், ஒன்றிய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி களிடமிருந்து சாதகமான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக உருக்கமாக கடிதம் எழுதுகிறார். நீண்டகாலமாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் இடைவெளி இருப்பது தெரியும். இப்போது ஆளுங்கட்சிக்குள்ளேயே இடைவெளி ஏற்பட்டிருப்பது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளை திக்கற்றவர்கள் என்று பிரதமர் கூறியிருப்பது அபத்தமானது மட்டும் இல்லை, துரதிர்ஷ்டவசமானதும் கூட. பிரதமர் நாடாளுமன்ற அவைக்கு வந்து மணிப்பூர் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். அப்படிச் செய்வது அவரின் மரி யாதையை புண்படுத்தும் என்று பிரதமர் கருதுகிறார். நாட்டு மக்களிடம் எங்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு உள்ளது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் அரசின் அணுகுமுறை, உங்களின் கடிதத்துக்கு மாறாக தன்னிசையானதாக இருக்கிறது.
இது ஒன்றும் புதியது இல்லை. எதிர்க்கட்சிகள் இதுபோன்ற அணுகுமுறையை பல கூட்டத் தொடர்களில் பார்த்திருக்கின்றன. கூட்டத்தொடர் முழுவதும் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்று தினந்தோறும் நோட்டீஸ் அளிக்கின்றனர். ஆனால் அரசு அதை நிராகரிக்கிறது. அவைத் தலைவரின் அனுமதிக்குப் பின்னர் உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேச எழும்போது, சபையின் தலைவர் அவரைத் தடுக்கிறார். ஆனாலும் அவையில் விவாதம் நடக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கூடுகின்றனர். நீண்ட காலமாக நாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வரலாற்றில் இடம்பெறும் என்று நாம் அறிவோம். வருங்கால சந்ததிகளுக்கு நாம் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் உரிமைக்காக நாம் போராடினோம் என்று அவர்களிடம் கூற முடியும். நாடாளுமன்றம் அமைதியான முறையில் நடக்கவேண்டும் என்று ஆளும் தரப்பு விரும்பினால், அதற்கான எளிய வழி, அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிப்பதே” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.