புதுதில்லி, செப். 8 - கேரளாவின் புதுப்பள்ளி, திரிபுராவின் போக்ஸாநகர், தன்பூர் தொகுதிகள், ஜார்க்கண்ட்டின் தும்ரி, மேற்கு வங்கத்தின் துக்புரி, உத்தரப்பிரதேசத்தின் கோசி, உத்தர்கண்டின் பாகேஸ்வர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு செப்டம்பர் 5 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளியன்று நடைபெற்றது. கேரளாவின் புதுப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மனும், மேற்கு வங்கத்தின் துக்புரியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திரா ராயும், உத்தரப்பிரதேச த்தின் கோசி தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் சுதாகர் சிங்கும், ஜார்க்கண்ட்டின் தும்ரி தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பேபி தேவி ஆகியோர் அபார வெற்றி பெற்றனர். திரிபுராவின் போக்ஸாநகர், தன்பூர் மற்றும் உத்தர்கண்ட்டின் பாகேஸ்வர் ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. போக்ஸாநகரில் தபஜ்ஜால் ஹொசைன், தன்பூரில் பிந்து தேப்நாத், உத்தர்கண்ட் பாகேஸ்வர் தொகுதியில் பார்வதி தாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பாஜக பெரும் முறைகேடு திரிபுராவின் போக்ஸாநகர், தன்பூர் தொகுதிகளின் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவின் போது பாஜக மிகப்பெரிய அளவில் முறைகேடுகளை அரங்கேற்றியது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது. இந்த 2 தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் எவ்வித பதிலும் அளிக்காத நிலையில், வியாழனன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையை சிபிஐ(எம்) புறக்கணித்தது.