states

தேனி எம்.பி., வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

புதுதில்லி, ஆக. 04- தேனி எம்.பி., ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தேர்தலின்போது தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிகம் நடந்தது; மேலும் அவர் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்கள், கடன் விவரங்களை மறைத்துள்ளார்; இதனால் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு பின்னர் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்து, வழக்கில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த உச்சநீதி மன்றம் தேனி எம்.பி., ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து, 2 வாரங்களில் இரு தரப்பினரும் பதிலளிக்க வேண்டும் எனவும், வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 4-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.