states

கர்நாடத்தில் முஸ்லிம்களுக்கான 4 சதவிகித தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது தவறு!

புதுதில்லி, ஏப். 13 - கர்நாடாக ஓபிசி இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்தது தவறு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  கர்நாடக மாநில அரசு தவறான அனுமானத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதாகவும், இது அதிர்ச்சிகரமான முடிவு எனவும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, 2பி அந்தஸ்தில் உள்ள மதச் சிறு பான்மையினருக்கான (முஸ்லிம்) தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட 4 சதவிகித இடஒதுக்கீடானது, ஒக்கலிகர் சமூகத்திற்கு 2சி அந்தஸ்தும், லிங்காயத் சமூகத்திற்கு 2டி அந்தஸ்தும் வழங்கப்பட்டு, இந்த இரு பிரிவினருக்கும் தலா 2 சதவிகிதம் என்ற அடிப்படையில் பிரித்து  வழங்கப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் இனிமேல் பொருளாதார ரீதியாக நலிவுற்ற உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) இடஒதுக்கீட்டில் - பிராமணர்கள், வைசியர்கள், முதலியார்கள், ஜெயின் உள்ளிட்ட சமூகத்தினருடன் போட்டிபோட்டே வரவேண்டும் என்றும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இதற்கு அப்போதே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும், ஒன்றிய பாஜக அரசு முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டைப் பறித்தது. கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு, வியாழனன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, “இஸ்லாமியர்களுக்கான 4 சதவிகித இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு ரத்து செய்து இருப்பது முதற்கட்ட பார்வையில் அதிர்ச்சிரமாகவும், பிழையானதாவும் தெரிகிறது. முற்றிலும் தவறான அனுமானத்தில் அடிப்படையில் கர்நாடக மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது” என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை எந்த பணி நியமனங்களோ, மாணவர் சேர்க்கைகளோ நடைபெறாது என்று மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.