புதுதில்லி/சென்னை, மார்ச் 28- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தின் முதல் நாளில் 25 கோடிக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐடியுசி, தொமுச, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, போக்கு வரத்து உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங் களும் இரண்டு நாள் (மார்ச் 28, 29) பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையொட்டி நாடு முழுவதும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல வடி வங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில்நாடு முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பிரம்மாண்டமான பொது வேலை நிறுத்தத்தையொட்டி கேரளா முற்றாக ஸ்தம்பித்தது. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், பஞ்சாப், புதுதில்லி, மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, நிலக்கரி சுரங்கங்கள், இரும்பு எஃகு ஆலைகள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையங்கள், ரயில்வே தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிரதான பொதுத்துறை தொழில் நிறுவனங்கள், ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் முற்றாக ஸ்தம்பித்தன.
தமிழகத்தில்...
தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுப் போக்குவரத்து 90 விழுக்காட்டிற்கும் மேல் இயங்கவில்லை. தலைநகர் சென்னை, மதுரை, கோவை, குமரி, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, நாகை, கிருஷ்ண கிரி, வேலூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்டோ, டாக்சி, லாரி உள்ளிட்ட வாகனங்களும் பெரும்பாலும் இயக்கப்படவில்லை.
வங்கிகள் மூடல்-வெறிச்சோடிய அலுவலகங்கள்!
வங்கி, இன்சூரன்ஸ், மின்சாரம், தொலைத் தொடர்புத்துறை, உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் அதிகாரிகள், ஊழியர்கள், வேலை நிறுத்தப்போராட்டத் தில் முழுமையாக பங்கேற்றதால் அலு வலகங்களில் காலி இருக்கைகள் மட்டுமே காணப்பட்டன. அதேபோன்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச் சோடிக் காணப்பட்டன. சென்னையில் பல்வேறு பகுதிகளில் துறைவாரி சங்கங்களும், பொதுத்துறை நிறு வன தொழிற் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. சங்கத்தின் தலைவர்கள் டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), டி.வி.சேவியர் (ஐஎன்டியுசி), ராஜா ஸ்ரீதர் (எச்எம்எஸ்), அந்திரிதாஸ் (எம்எல்எப்), வி.சிவகுமார் (ஏஐயுடியுசி), க.பேரறிவாளன் (எல்எல்எப்), மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
முழு வெற்றி: அ.சவுந்தரரராசன்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி யில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கலந்து கொண்டார். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில் சாதாரண மக்களை ஒன்றிய அரசு கொள்ளை யடிக்கிறது. தொழிலாளர்களுக்கு எதிராகச் சட்டம் இயற்றியதை கண்டிக்கிறோம், குறைந்தபட்ச ஊதியம் மாதம் 21000 ரூபாய் வழங்கும் வகையில் பொதுச் சட்டம் இயற்ற வேண்டும்” என்றார். “பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு குறைப்பதோடு, எல்ஐசி, வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும்” என்று வலியுறுத்திய அவர், “100- தொழிலாளர்கள் என்றி ருந்த நிலையில், 300 தொழிலா ளர்களுக்கு மேல் உள்ள தொழிற் சாலைக்குத்தான் சட்டம் பொருந்தும் என்ற புதிய சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்” என்றார்.
ஜி.சுகுமாறன்
தென்சென்னை மாவட்டம் கிண்டி யில் நடந்த மறியல் போராட்டத்தில் பங் கேற்ற சிஐடியு மாநிலப் பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன் செய்தியாளர்க ளிடம் பேசுகையில், “தமிழகத்தில் அரசு பேருந்துகள் 99 விழுக்காடு இயங்க வில்லை. வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறைகள் அலுவலகங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. என்எல்சி, பிஎச்எல் மத்திய பொதுத் துறை ஊழியர்கள் 95 விழுக்காடு பங்கேற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் தனியார் ஆலைகள் முழுமையாக மூடிக் கிடக்கின்றன. தமிழக வேலைநிறுத்தம் முழு வெற்றி யடைந்துள்ளது” என்றார். “இந்த வேலைநிறுத்தப் போராட்டத் தால் அனைத்துத் துறைகளும் ஸ்தம்பித்துவிட்டன. இதனால் ஒன்றிய அரசு கடுமையாக திணறத் தொடங்கி யுள்ளது. வேலைநிறுத்தம் எதிர் காலத்தில் 2 நாட்கள் என்பதை தாண்டி வலுவான போராட்டத்தை மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும். அந்த போராட்டம் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தும் வகையில் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.