புதுதில்லி, செப். 6- மணிப்பூரில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சுரண்டல்கள் குறித்து ஐநா நிபுணர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். இது ஜி 20 மாநாட்டுக்கு முன்பே நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஐநா நிபுணர்களின் நிலைப்பாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவுவதாக ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு தெரிவித்துள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், வீடு இடிப்புகள், கட்டாய வெளியேற்றங்கள், சித்ரவதைகள் மற்றும் பாகுபாடான அரசாங்க நடவடிக்கைகள் குறித்து ஐநா நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஐ.நா.வின் ‘சிறப்பு நடைமுறைகள் ஆணை வைத்திருப்பவர்கள்’ என்கிற குழு மணிப்பூரின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான உதவிகளை வழங்குவதில் நிர்வாகம் தவறியதை அந்த செய்திக்குறிப்பு விமர்சித்துள்ளது. மணிப்பூரில் இருந்து வரும் செய்திகளும் படங்களும் அதிர்ச்சியளிக்கின்றன.
ஏராளமான பெண்கள், குறிப்பாக குக்கி பிரிவில் உள்ள பெண்கள் தாக்கப்பட்டனர். மணிப்பூரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதுக்குழு, மணிப்பூரில் நிலைமை அமைதியாக இருக்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. மணிப்பூர் உட்பட இந்தியர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஐ.நா.விடமிருந்து வந்ததாகக் கூறப்படும் செய்திக்குறிப்பு தேவையற்றது, யூகமானது மற்றும் தவறாக வழிநடத்துகிறது. மணிப்பூரில் உள்ள நிலைமை மற்றும் அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிப் புரிந்து கொள்ளாத அறிக்கை என நிரந்தரத் தூதரகம் கூறியது. ஜி 20 மாநாடு தொடங்க உள்ள நிலையில், மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து கவலை தெரிவித்து ஐ.நா நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது மோடி அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதில் உறுதி பூண்டுள்ளதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறிவரும் நிலையிலேயே ஐ.நாவின் இந்த விமர்சனம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.