states

ஒமைக்ரான் பிஎப்.7 திரிபு உலகில் 2 ஆண்டுகளாக உள்ளது திடீரென அதனைப் பூதாகரமாக்க வேண்டிய தேவை என்ன?

புதுதில்லி, டிச. 24 - “சீனாவில் தற்போது வேகமெடுத்து இருக்கும், கொரோனா பாதிப்புக்கு காரணமான ‘பிஎப்.7’ வகை ஒமைக்ரான் திரிபு வைரஸ், உலகில் பரவி 2 ஆண்டுகளாகி விட்டது; அது ஏற்கெனவே 91 நாடுகளில் உள்ளது; அவ்வாறிருக்க, திடீரென ஒமைக்ரான் பிஎப்.7 திரிபை பூதாகரமாக்க வேண்டிய தேவை என்ன?” என்று விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியிருப்பதாக, பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிஎப்.7 ஒமைக்ரான் திரிபு அரிதான வைரஸ் என்றாலும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்றாகவே உள்ளதால், அதனைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவை யில்லை என்றும் அவர்கள் கூறியிருப்பதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. “91 நாடுகளில் நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு வரிசை மாற்ற சோதனையில் பிஎப்.7 வகை மற்றும் அதனை ஒத்த திரிபு வைரஸ்கள் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கண்டறியப்பட்டு வருகின்றன.

ஆனால், திடீரென பிஎப்.7 வகை திரிபை இந்த அளவுக்குப் பெரிதுப்படுத்தக் காரணம் என்ன என்பதை எங்களால் யூகிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா மாதிரி பரிசோதனையில் 0.5 சதவிகிதம் பேருக்கு மட்டுமே பிஎப்.7  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 2021 பிப்ரவரி 26-ஆம் தேதிக்குப் பிறகு 47 ஆயிரத்து 881 பேருக்கு இந்த தொற்று பாதித்துள்ளது. அதைத்தொடர்ந்து, சுமார் 22 மாதங்களாக இது உலகம் முழுவதையும் சுற்றிக் கொண்டிருக்கிறது.  எனினும், ஒமைக்ரான் வகையின் திரிபான எக்ஸ்பிபி (XBB) உள்ளிட்ட பல்வேறு வகையான அச்சுறுத்தும் வைரஸ்களைக் காட்டிலும் இது அவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் அச்ச உணர்வு தேவையற்றது” என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, உலகையே அச்சுறுத்தும் அளவிற்கு, சீனாவில் பிஎப்.7 ஒமைக்ரான் திரிபு வேகம் எடுத்ததற்கு, கொரோனா கட்டுப்பாட்டை அந்நாடு திடீரென முழுமையாக விலக்கிக் கொண்டது காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். “கொரோனா நம்மை விட்டு ஒழிந்துவிடவில்லை. அது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியதும், அதனை எதிர்கொள்ள எப்போதும் திட்டங்களுடன் இருப்பதும் அவசியமாகும்” என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.