தில்லி அரசு வழக்கில் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு
இத்தீர்ப்பு ஒன்றிய அரசாங்கத்தின் முகத்தில் அறைந்தது போன்றதாகும். ஏனெனில், தில்லி வாழ் மக்கள் சட்டமன்றத் தேர்தலிலும், மாநகராட்சிக்கான தேர்தலிலும் பாஜகவை நிராகரித்த போதிலும், ஒன்றிய அரசாங்கம் துணை நிலை ஆளுநர் வழியாக தில்லியை ஆள்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தது. மேலும் இந்தத் தீர்ப்பானது, தில்லி வாழ் மக்களுக்குத் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தங்களை ஆட்சி செய்வதற்கு வழிவகுக்கும் விதத்தில் முழு அளவில் மாநில அந்தஸ்தைப் பெறுவதற்காக ஓர் அடி முன்னெடுத்து வைக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது.
சிபிஐ(எம்), தில்லி மாநிலக்குழு
புதுதில்லி, மே 11 - “தில்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகச் சேவைகளில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம்” என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி யுள்ளது. மேலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட அர சின் முடிவுகள் மற்றும் அதன் அமைச்ச ரவை குழுவின் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டவரே ஆளுநர்” என்றும் இந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி யுள்ளது. தில்லியில் குடிமைப்பணி அதிகாரி களை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கா, அல்லது துணைநிலை ஆளுநருக்கா? என்ற சிக்கல் எழுந்த நிலையில், இதுதொடர் பாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான தில்லி ஆம் ஆத்மி அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது, அரசியலமைப்பு சார்ந்த சிக்கல் என்பதால், வழக்கு விசார ணையானது, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர். ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப் பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
விசாரணையின்போது, “தில்லி இந்தி யாவின் தலைநகராக உள்ளது; உலக நாடுகள் தில்லியின் வழியாகத்தான் இந்தி யாவை பார்க்கின்றனர்; இதனால் அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இட மாற்றத்தில் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் என்பது தேவையான மற்றும் அவசிய மான ஒன்று. தில்லி நிர்வாகத்தின் மீது ஒன்றிய அரசுக்கு சிறப்பு அதிகாரங்கள் இருப்பதும், முக்கியமான பிரச்சனை களில் கட்டுப்பாட்டை செலுத்துவதும் அவசியம். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசுக்கும், தில்லி அரசுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படாமல் தடுப்பதற்கும் சட்டங்கள் உள்ளன. இதனால் தில்லி யின் மீது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டை வைத்திருப்பது தேச நலனுக்கு முக்கிய மானது’’ என ஒன்றிய அரசுத் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. அதேநேரம், “ஒன்றிய அரசுக்கு சிறப்பு அதிகாரம் என்பது, தில்லி சட்டப் பேரவையை அர்த்தமற்றதாக ஆக்கி விட்டது. இதனால் தில்லி அரசால் தனித்து மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது. தில்லி அர சின் முடிவுகள் கிடப்பில் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசானது, தில்லி அரசின் கொள்கை சார் முடிவு களை, துணை நிலை ஆளுநர் மூலமாக, தடுத்து செயல்பட விடாமல்செய்கிறது. எனவே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’’ என தில்லி அரசு வாதங்களை வைத்தது. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இந்த வழக்கில் வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழ னன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதில்தான், “மக்களாட்சியில் உண்மையான நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு உள்ளது” என்று அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. “குடியரசுத் தலைவரால் வழங்கப் பட்டுள்ள நிர்வாக அதிகாரங்கள் துணை நிலை ஆளுநருக்கு உண்டு என்றாலும் அது ஒட்டுமொத்த தில்லி அரசின் நிர்வாகத்தினை கட்டுப்படுத்தாது; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மற்றும் அதன் அமைச்சரவை குழுவின் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டவரே ஆளுநர்” என்றும் தனது வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்த தீர்ப்பில் உச்சநீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது. நீதிபதிகள் மேலும் கூறியிருப்பதாவது: “இந்த வழக்கில், அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளோம். கடந்த 2019-இல் நீதிபதி அசோக் பூசண் அமர்வு வழங்கிய தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறோம். தலைநகர் தில்லிக்கு அரசு அதிகாரிகளை நியமிப்பதில், தில்லி அரசுக்கு எந்த அதிகாரமும் பங்கும் இல்லை என்ற முந்தைய தீர்ப்பை ஏற்க முடியாது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கைகளி லேயே நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும். அதனால்தான், தில்லி மக்க ளின் விருப்பத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில், தில்லி சட்டப்பேர வைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதி காரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு களின் கையில் கொடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலை உருவாக் கும். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடு க்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் அதிகாரிகள் இல்லை என் றால், அது அந்த அரசின் மீதான நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும். ஒரு அமைச்சரின் கீழ் செயல்படும் அதி காரி அமைச்சரின் உத்தரவுகளுக்கு கட்டுப் படவில்லை என்றால் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு என்ற கொள்கையில் ஆபத்து ஏற்பட்டு விடும். தில்லி அரசு அதி காரிகள் மீது அதிகாரம் செலுத்த தில்லி அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு.
தில்லி அரசு எடுக்கும் நடவடிக்கை கள் ஒன்றிய அரசின் சட்டத்திற்கு உட்பட்டது என்றாலும், மாநிலங்களின் நிர் வாக அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், ஜனநா யகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் ஒரு அங்கம் ஆகும். நாட்டில் உள்ள மற்ற யூனியன் பிர தேசங்களைப் போல அல்ல புதுதில்லி. இது யூனியன் பிரதேசமாக இருந்தா லும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப் படையிலேயே செயல்படுகிறது. பொது ஒழுங்கு, காவல்துறை, நிலம் உள்ளிட்ட துறைகளை தவிர்த்து பிற சேவைத் துறைகளில் பணிகளில் சட்டம் இயற்ற தில்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது.” இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இது ஒன்றிய பாஜக அர சுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. தீர்ப்பை வரவேற்றுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல் வருமான அரவிந்த் கெஜ்ரிவால், “தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு அதிகாரிகளை இட மாற்றம் செய்ய அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மூலம் மட்டுமே அதிகாரிகள் செயல்படு வார்கள்” என்று டுவிட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார். மேலும், தீர்ப்பைப் பெற்ற கையோடு, துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்திக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
தில்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகா ரம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு வரவேற்றுள்ளது. “பொது ஒழுங்கு, காவல், நிலம் தொடர்பான விஷ யங்களைத் தவிர தேசிய தலைநகரில் உள்ள நிர்வாக சேவைகளில் தில்லி அரசாங்கத்திற்கு நிர்வாக அதிகாரம் உள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடும் உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பை தில்லி மாநிலக் குழு வரவேற் கிறது” என்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.