states

சாதி ஆதிக்க வெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக : சிபிஐ

சென்னை, ஜூன் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகம் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சாதி வெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  “சாதிவெறிக் கும்பல் ஒன்று, இல்லற வாழ்வை தொடங்க முனைந்த இருவரையும் பிரித்து வதைக்கும் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக் குழு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த வழக்கறிஞர் உள்பட முன்னணி தலைவர்களை  தாக்கியும், மாவட்டக் குழு அலுவலகத்தை  சூறையாடியுள்ளது. இந்த கொடூரக் குற்றச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இதன் தொடர்ச்சியாக வழக்குப்பதிவு செய்வதில், சாட்சியங்களை உறுதி செய்வதில், ஆவண சாட்சியங்களை பாதுகாத்து, நீதிமன்றத்தில் குற்றத்தை உறுதிப்படுத்தி குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதில் காவல்துறை சமரசமின்றி செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தொன்மை தமிழர் மரபுக்கு மாறாக சாதி வெறி கொண்டு, மனிதர்களை பிளவு படுத்தும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தமிழ்நாடு அரசு மேலும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  இதற்கு சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டம் ஒன்றை வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்வது டன், விரும்புரிமைப்படி திருமணம் செய்து கொண்டுள்ள  மதன் - உதய தாட்சாயினி ஆகியோர் அச்சமின்றி வாழ்க்கை  நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.