ராணுவ வீரர்கள் சாதி மற்றும் பிராந்திய அடிப்படையில் சேர்க்கப்படுவதற்கு மாறாக ராணுவத்தின் தேர்வு பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. நாட்டின் இனம் ,மொழி, மாநிலங்கள் மற்றும் மதம் ஆகிய பன்மைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்து தேர்வுகள், அதைத் தொடர்ந்து நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பன்மைத்துவ பின்னணியில் வெளிப்படையான தேர்வுகள் நடக்கின்றன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இந்திய ராணுவ அகாடமியால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளின் மாநிலவாரியான பட்டியலின்படி ஹரியானா, உத்தரகண்ட் ,மகாராஷ்டிரா ,இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் பெருமளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாட்டின் கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். அதிகாரிகள் மட்டத்தில் சம நிலையற்ற, அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாத அசமத்துவ நிலை நிலவுகிறது. அலி அகமது என்பவர் எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி வாராந்திர இதழில் எழுதிய “காணாமல் போன முஸ்லிம் ராணுவ அதிகாரிகள் “ எனும் கட்டுரையில், இந்திய ராணுவ அகாடமியில் 2005 முதல் 2011 வரையிலான காலத்தில் பயிற்சி பெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு சதவீதத்திற்கு உள்ளாகவே இருந்ததையும் 2017 மற்றும் 2018 ஆண்டுகளிலும் கூட இதே நிலை நீடித்ததையும் குறிப்பிடுகிறார். மார்ச் 2021 நிலவரப்படி ராணுவத்தில் அனுமதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் பணியிடங்களின் எண்ணிக்கை 12,29,559 ஆகும். ஆனால் அப்போது பணியில் இருந்தவர்கள் எண்ணிக்கை 11,51,726 மட்டுமே. அதிகாரிகளின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 50,806 ஆகும். பணிபுரியும் அதிகாரிகளின் எண்ணிக்கை 42,959 ஆகும். ஒவ்வொரு ராணுவ அதிகாரிக்கும் 27 வீரர்கள் என்ற விகிதத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை உள்ளது. இது ராணுவத்தில் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை உணர்த்துவதாக உள்ளது. இத்தகைய நிலைமை சமூகப் பிரதிநிதித்துவமற்ற சிப்பாய் வர்க்கம் , அதிக பிரதிநிதித்துவம் கொண்ட மேலாதிக்க அதிகார வர்க்கத்தால் வழி நடத்தப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.