states

img

மணிப்பூர் நிலைமை: ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத்தில் 3 அறிக்கைகள் தாக்கல்!

புதுதில்லி, ஆக. 21 - மணிப்பூர் வன்முறை சம்பவங் கள் தொடர்பாக ஆராய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில்  அமைக்கப்பட்ட குழு,  மூன்று அறிக்கைகளை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.  இந்த அறிக்கைகளை பெற்றுக் கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.  சந்திரசூட், அவற்றை  வழக்கறிஞர் களுக்கு வழங்குமாறும், அவர்கள் அறிக்கைகளில் முன்மொழியப் பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து,  தங்களின் பதிலை தெரிவிக்குமாறும்; குறிப்பாக, ஒன்றிய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பரிந்துரை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மணிப்பூரில் கடந்த மே 4 அன்று,  மெய்டெய் பிரிவைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கானோர், குக்கி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்கள் இருவரை, நிர்வாணமாக  இழுத்துச் சென்று  பாலியல் அத்து மீறல் கொடுமை, மற்றும் சித்ரவதை களை அரங்கேற்றியதுடன், கும்பல் வல்லுறவுக்கும் உள்ளாக்கினர்.  இதுதொடர்பான வீடியோ ஆதாரம் 2 மாதம் கழித்து, கடந்த ஜூலை 19 அன்று வெளியான பின்னணியில், நாடே பெரும் அதிர்ச்சியில் உறைந்தது. சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்  கொண்ட உச்ச நீதிமன்றத்  தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இந்த விவகாரத்தை ஜூலை 20  அன்று தானாக முன்வந்து விசார ணைக்கு எடுத்து விசாரணை நடத்தி  வருகிறார். அதன்படி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு கடந்த ஜூலை 31, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் இந்த  வழக்கை விசாரித்தது.  கடைசியாக நடைபெற்ற விசார ணையின்போது, மணிப்பூர் வன்முறைகள் குறித்து,  கள ஆய்வு  மேற்கொள்ள, 3 பேர்  கொண்ட ஓய்வு பெற்ற பெண் நீதிபதிகள் குழுவை அமைத்த உச்சநீதிமன்றம், ஜம்மு  - காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி கீதா மிட்டல் குழு விற்குத் தலைமை வகிப்பார்; தில்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆஷா மேனன், மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஷாலினி பி ஜோஷி ஆகியோர் குழு வில் இடம்பெறுவார்கள் என்று அறி வித்தது.  

முழுக்க முழுக்க பெண் நீதிபதி களைக் கொண்ட இந்தக் குழு வானது, மணிப்பூர் வன்முறை தொடர் பான விசாரணை, இழப்பீடுகள், மறு வாழ்வு, மறுகுடியமர்த்தல் போன்ற  மனிதாபிமான உதவிகள் செய்யப் படுவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதேபோல, மணிப்பூர் வன் முறைச் சம்பவங்கள் தொடர்பாக, ஒன்றிய அரசு ஏற்கெனவே 11 வழக்கு களில் சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டிருக்கும் நிலையில், பாலி யல் வல்லுறவு வழக்குகளை விசா ரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநி லங்களைச் சேர்ந்த  அதிகாரிகளை இடம்பெறச் செய்ய வேண்டும்; சட்டத்தின் மீது  நம்பிக்கையை உறுதிப்படுத்த, குறைந்தபட்சம் டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள 5 அதி காரிகள் விசாரணை நடத்த  வேண்டும். மேலும், சிபிஐ விசாரிக் கும் வழக்குகளை தேசிய பாதுகாப்பு முன்னாள் துணை ஆலோசகரும் மகாராஷ்டிரா முன்னாள் டிஜிபி-யுமான  தத்தாத்ரே பட்சல்கிகர் கண் காணிப்பார். அதேபோல, சிபிஐ விசாரணை அல்லாமல், சிறப்பு புல னாய்வு விசாரணைக்கு (SIT) உத்தர விடப்பட்டு இருக்கும் 42 வழக்கு களை மணிப்பூருக்கு வெளியே உள்ள டிஐஜி அந்தஸ்திலான அதி காரிகள் கண்காணிப்பார்கள்; ஒவ்வொரு அதிகாரியும் 6 சிறப்பு புல னாய்வு விசாரணைகளை கண்காணிப் பார்கள் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு திங்க ளன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணை, இழப்பீடுகள், மறுவாழ்வு, மறுகுடி யமர்த்தல் போன்ற மனிதாபிமான உதவிகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான  பெண் நீதிபதிகள் குழுவானது மூன்று அறிக்கைகளை தாக்கல் செய்திருப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார். மணிப்பூர் விவகாரத்தை ஆராய்ந்து, நிவாரண நடவடிக்கை களை மேற்கொள்ளவுள்ள ஓய்வு பெற்ற பெண் நீதிபதிகள் குழுவிற்கு, அவர்களே அவர்களுக்கான சொந்த நடைமுறையை வகுத்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; தற்போதைய நிலை மை என்னவென்றால், குழுவின் உறுப்பினர்களுக்கு உட்காருவதற்கு இடம் இல்லை ; தங்களுக்கு இடம் ஒதுக்குமாறு நீதிபதி கீதா மிட்டல், தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிப தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் சுட்டிக்காட்டினார். அப்போது, இதுதொடர்பாக, “நீதிபதி மிட்டல் மற்றும் தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரிடம் நான் பேசுகிறேன்” என்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதி மிட்டல் பாதிக்கப் பட்டோரிடம் சாட்சியம் பெறும் அலு வலகத்தை பயன்படுத்திக் கொள்ள லாம்; அவ்வாறு இல்லாதபட்சத்தில் உள்துறை அமைச்சகம் தேவை யான ஏற்பாடுகளைச் செய்து தரலாம்” என்றார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை, அவர்களை பாதுகாப்பற்ற உணர்விலிருந்து மீட்டெடுப்பதற்கான உளவியல் ஆலோசனைகள், நிவாரண முகாம்களின் நிலை; பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவ சுகாதாரம் உள்ளிட்ட பல தலைப்புகளின் கீழ் நீதிபதிகள் குழு பிரச்சனைகளை ஆராய்ந்துள்ளது.

1.     கலவரம், தீவைப்பில் மணிப்பூர் குடிமக்கள், ஆதார் அட்டை போன்ற  ஆவணங்களை இழந்துள்ள நிலையில், அவை மீண்டும் அவர்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.

2. மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் மற்றும் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் திட்ட உதவிகளைப் பெறும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒருவர் மற்ற திட்டங்களின் கீழ் பலன்கள் பாதிக்கப்பட்டவர், அவருக்கு மணிப்பூர் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படாது என்று உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும்.

3. மணிப்பூரில், நிர்வாக வழிகாட்டல்களுக்காக கள நிபுணர்களை நியமிக்க வேண்டும் - என்பன போன்ற ஆலோசனைகள் இந்த அறிக்கைகளில் முன்மொழியப்பட்டு இருப்பதாக கூறிய தலைமை நீதிபதி, “குழுவின் செலவுகளைச் சமாளிப்பதற்கான நிதி; பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொள்வதற்கான தனி இணையதள முகவரி,  அதுதொடர்பான விளம்பரம்; ஏனைய உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவின் ஆலோசனைகள், வியாழனன்று காலை, மணிப்பூர் மாநில அரசுத் தலைமை வழக்கறிஞருடன் பகிர்ந்து கொள்ளப்படும்; பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர் திருமதி விருந்தா குரோவரும் வெள்ளிக்கிழமைக்குள் தனது ஆலோசனைகளை வழங்கலாம் என்றார்.