states

ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்வதை தவறென கூற முடியாது!

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து

புதுதில்லி, மே 11 ஒரே பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி, இரண்டு ஒரே பாலின தம்பதி யர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். “திருமணத்துக்கான இணையரைத் தேர்வு செய்யும் உரிமை எல்.ஜி.பி.டி.க்யூ. (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer or Questioning persons or the community - LGBTQ) சமூகத்தின ருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்; ஒரே பாலின திரு மணத்தை அங்கீ கரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசி யலமைப்புச் சட்டப்பிரிவு 14 மற்றும் 21-ஐ மீறுவதா கும்” என்று தங்களின் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமை யில் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹீமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த 10 நாட்களாக இந்த வழக்கை விசாரித்து வருகிறது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எம். சிங்வி, ராஜு ராமச்சந்திரன், கே.வி. விஸ்வ நாதன், ஆனந்த் குரோவர், சவுரப் கிர்பால் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இந்த விசாரணைகளின்போது, “ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கூட ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. 46 நாடுகளில் வெறும்  6 நாடுகள்தான், ஒரே பாலினத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்துள்ளன. அதே போல் ஐரோப்பிய யூனியன் அமைப்பு உறுப்பு நாடுகள் தன்பாலின திருமணங்களை அங்கீ கரிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை” என்று  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். 

இந்நிலையில், இந்த வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குழந்தை  உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்  (NCPCR) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  ஐஸ்வர்யா பாட்டீ ஆஜராகி வாதிட்டார். அவர்,  ‘மாற்றுப் பாலினத்தவர்களுக்கு (ஆணுக்கும் பெண்ணுக்கும்) பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் நமது நாட்டில் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது’ என்றார். மேலும், “ஒரே பாலின தம்பதிகள் திரு மணம் செய்யும் போது தாய்மை அடைய முடியாது”  என்றும், “அவர்கள் குழந்தை பெற முடியாமல் குடும்பம் என்ற நிலையை அடைய முடியாது” எனவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.  சந்திரசூட், “தனி நபர் கூட ஒரு குழந்தையை தத்தெ டுக்கலாம்” என்றும், “திருமணம் நடைபெறாமல் தனியாக வசிப்பவரும் குழந்தையைத் தத்தெடுக்க இந்திய சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியதுடன், “உயிரியல் ரீதியான பிறப்பு  கட்டாயம் இல்லை” என்பதை குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணைய வழக்கறிஞருக்கு சுட்டிக்  காட்டினார். அதற்கு, தத்தெடுப்பு மற்றும் வாரிசு  உரிமைகள் ஒரே பாலின ஜோடிகளுக்கு வழங்கப் பட வேண்டும் என்பதை ஆதரிப்பதாக ஐஸ்வர்யா பாட்டீ தெரிவித்தார். ஜமாத்துல் உலமா இ- ஹிந்த் என்ற இஸ்லா மிய அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரை ஞர் கபில் சிபல், “ஒரே பாலினத்தவரின் திரு மணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது மிகவும் அபாயகரமான நடவடிக்கையாகும். இதை நாடா ளுமன்றம் எப்போதும் முன்னெடுக்காது என்ப தால், நீதிமன்றமும் இதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கூடாது” என்றார். மேலும், “ஒரே பாலின திருமணம் போன்ற கருத்துக்கள் தீவிர நாத்திக  உலகக் கண்ணோட்டங்களைக் கொண்ட மேற் கத்திய கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகவும், அதை இந்தியாவின் மீது திணிக்கக்கூடாது” என்றும் குறிப்பிட்டார்.

இதேபோல ஆர்எஸ்எஸ்-சின் மகளிர் பிரி வான சம்வர்தினி நியாஸ் சார்பில் ஆஜரான வழக்க றிஞர், “ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீ காரம் அளிப்பது என்பது, ஹிந்து திருமண சட்டத்  தின் அடிப்படையையே தோல்வியடையச் செய்யும்”  என்று கூக்குரல் எழுப்பினார். “ஒரே பாலின திரு மணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது இந்திய பாரம்பரியத்தின் வேரை அசைத்து, சமூகத்தை தலைகீழாக்கும். ஒரே பாலின தம்பதிகளால் வளர்க்கப்படும் குழந்தைகளின் வளர்ச்சியும், குண நலனும் பாதிக்கப்படும். மேற்கத்திய நாடுகளின் தாராள நடத்தைகளை நமது நாட்டின் ஹிந்து கலாச்சாரத்தின் மீது திணிப்பதாக இது அமையும்” என்றும் கூறினார். ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்  மேத்தா வாதிடுகையில், ஒரே பாலின திருமணத் திற்கு உத்தரப் பிரதேசம், மணிப்பூர், மகாராஷ்டிரா, சிக்கிம், ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாகவும், அந்த கடித நகல் அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வியாழனன்றும் இந்த வழக்கில் தொடர்ந்து வாதங்கள் வைக்கப்பட்டன.  மத்தியப் பிரதேசம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜராகி வாதாடினார். அவர்,  “பாரம்பரியம், தனிநபர் சட்டம், மதம் ஆகியவற் றின்படி திருமணம் செய்துகொள்ள, மாற்றுப் பாலின தம்பதிகளுக்கு உரிமை உண்டு. அதே சமயம் தன்பாலின உறவாளர் திருமணத்திற்கான சட்டத்தை இயற்றும் முடிவை நாடாளுமன்றத்திற்கு விட்டுவிட வேண்டும்” என்று வாதங்களை முன்வைத்தார்.

முன்னதாக நீதிபதிகள் தலையிட்டுப் பேசுகை யில், “திருமணத்தை ஒழுங்குபடுத்துவதில் அர சுக்கு உரிய கடமை உள்ளது என்பதை மறுக்க முடி யாது. ஆனால் திருமணம் என்பது அரசியலமைப்பு வழங்கியிருக்கும் உரிமையாகும். எனவே, சட்டப்பூர்வ அங்கீகாரம் என்று மட்டும் பார்க்காமல் அடிப்படை உரிமை என்ற கருத்தை மனத்தில் கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டினர். “முன்பு வெவ்வேறு சாதிகளுக்கு இடையே யான திருமணங்கள் அனுமதிக்கப்படவில்லை. பிற மதங்களுக்கு இடையேயான திருமணங்களை நாம் கேள்விப்பட்டிருக்கவில்லை. எனவே, அரசி யலமைப்புச் சட்டமே ஒரு பாரம்பரியத்தை உடைப்  பதுதான்” என்று கூறிய சந்திரசூட் அமர்வு, “அரசி யலமைப்புச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள உரிமை இல்லை என்று கூறுவது தவறா னது. திருமணம் என்பது இரண்டு தனிமனிதர்கள் ஒன்றாக வாழ்வதற்கான உரிமையை முன்வைக்கி றது. திருமணம் என்பது ஒரு குடும்பம். ஒரு திரு மணத்தில் ஒன்றாக வரும் இருவர் ஒரு குடும்பத்தை உருவாக்குகிறார்கள்” என்று தெரிவித்தது. மேலும், ‘திருமணத்தில் பங்கேற்றவர்கள் குழந்தை பெற விரும்பாவிட்டால் என்ன செய்யப் போகிறோம்.. அல்லது குழந்தைகளைப் பெற முடி யாத வயதில் திருமணம் செய்து கொள்ளு பவர்களை நாம் அங்கீகரிக்காமல் இருக்கி றோமா.. எனவே ஒரே பாலின தம்பதிகளின் திருமணம் தொடர்பாக திருமணச் சட்டத்தை நாடாளுமன்றம் மறுவரையறை செய்யலாம்” என்று குறிப்பிட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.