states

img

மீண்டும் உயரும் வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி விகிதங்கள்!

10 மாதத்திற்குள் 6-ஆவது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி

புதுதில்லி, பிப். 8 - ரெப்போ வட்டி விகிதத்தை, இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவிகிதமாக இருந்த  நிலையில், தற்போது மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிக்கப் பட்டு உள்ளது. இதன்மூலம் ரெப்போ வட்டி வகிதம் 6.50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஒருநாட்டின் மத்திய வங்கி, பிற வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி  விகிதமே ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) எனப்படுகிறது. அதன்படி இந்தியாவில் ரிசர்வ் வங்கி  அவ்வப்போது ரெப்போ விகிதங் களை மாற்றியமைப்பது வழக்கம். இந்த அடிப்படையிலேயே ரெப்போ விகிதம் தற்போது 6.50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட், பிப்ரவரி 1 அன்று, தாக்கல் செய்யப்பட்ட பின்னணியில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய ரிசர்வ் வங்கி யின் நாணயக் கொள்கைக் குழுவின்  மூன்று நாள் கூட்டம் பிப்ரவரி 6 திங்கட்கிழமையன்று துவங்கியது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், புதன்கிழமையன்று வெளியிட்டார். அப்போது ரெப்போ விகித உயர்வை அவர் அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித மானது, கொரோனா பேரிடரை யொட்டி 4 சதவிகிதம் என்ற அள விலேயே கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இது 2022 மே 4 அன்று 40 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 8, ஆகஸ்ட் 5, செப்டம்பர் 30 ஆகிய தேதிகளிலும் ரெப்போ விகிதம் தலா 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டன. கடைசி யாக 2022 டிசம்பர் 7-ஆம் தேதியன்று 35 அடிப்படைப் புள்ளிகள் அளவிற்கு ரெப்போ உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஒரே ஆண்டிற்குள் 5-ஆவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டு, ஒட்டுமொத்த ரெப்போ விகிதம் 6.25 சதவிகிதம் என்ற  அளவை எட்டியது. இந்நிலையில், தற்போது மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள்  உயர்த்தப்பட்டு, ஒரே நிதி யாண்டிற்குள் - 2022 மே முதல் 2023  பிப்ரவரி வரையிலான 10 மாதத் திற்குள் 2.50 சதவிகிதம் அளவிற்கு ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

6.50 சதவிகிதம் என்ற தற்போதைய ரெப்போ வட்டி விகிதமே, 2018 ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு, மிக அதிகபட்சமான ரெப்போ விகிதமாகும். இந்த ரெப்போ விகித உயர்வுக்கு, ரிசர்ச் வங்கி நாணயக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினர்களில் பெரும்பான்மையாக 4 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதிய ரெப்போ விகித அதி கரிப்பால், வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை (EMI) அதிகரிக்க உள்ளது. இது ஏழை, நடுத்தர மக்களின் தலையில் கூடுதல் சுமையாக அமையவுள்ளது. பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே ரெப்போ விகித உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், புதிய வட்டி விகித அதிகரிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.4 சதவிகிதமாக குறையும்

சக்திகாந்த தாஸ் பேட்டி

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக்குழு கூட்டத்திற்குப் பின்,  ரெப்போ வட்டி விகித அதிகரிப்பு உள்ளிட்ட முடிவுகளை விளக்கி, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த 3 ஆண்டுகளாக உலகளவில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகள், உலகள விலான நிதிக்கொள்கைகளுக்கு பரிசோத னையாக அமைந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களுக்கு இடையே வளரும் சந்தையைக் கொண்ட பொருளாதார நாடுகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டன. இதனால், நடப்பு 2022-23 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகித மாக இருக்கும், பணவீக்கம் சராசரியாக 5.6 சதவிகிதமாக இருக்கும். பணவீக்கம் இலக்கை விட அதிகமாக உள்ளது. உலகப் பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் இந்திய பொருளாதாரமும் பாதிக்க வாய்ப்புள்ளது.

உலகப் பொருளாதாரச் சூழல் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது மோசமாகத் தெரியவில்லை. முக்கியப் பொருளாதார நாடுகளில் வளர்ச்சி வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன. எனினும், 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவிகிதம், 2-ஆவது காலாண்டில் 6.2 சதவிகிதம், 3-ஆவது காலாண்டில் 6 சதவிகிதம், 4-ஆவது காலாண்டில் 5.8 சதவிகிதம் என சராசரியாக  2023-24 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி (GDP)  6.4 சதவீதமாக இருக்கும். இயல்பான பருவமழை இருக்கும். சில்லரைப் பண வீக்கம் 2023-24 நிதியாண்டில் 5.3 சதவிகித மாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கடனுக்கான அபராதக் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மைக்கான விதிகளைக் கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. பைலட் திட்டமாக 12 நகரங்களில் நாணயம் வழங்கும் இயந்திரங்களை ரிசர்வ் வங்கி அமைக்கும். எப்பிஐ முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன/ பத்திரச் சந்தைக்கான நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும்.” இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறி யுள்ளார்.