புதுதில்லி, ஜூன் 24 - இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் தீவிர மடைந்துள்ளது. லவ் ஜிகாத்தைத் தடுக்கிறோம் என்ற பெயரில், மதமாற்றத் தடைச் சட்டம், மாட்டி றைச்சிக்குத் தடை, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைச் சட்டம் என்ற பல வகைக ளிலும் இஸ்லாமியர்களை ஒடுக்கும் முயற்சி நடக்கிறது. இதனை கேள்வி கேட்கும் ஜனநாயகவாதிகள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு, விசாரணை அமைப்புக்கள் மூலம் பழி வாங்கப்பட்டு வருகின்றனர். நாட்டின் அனைத்து அரசு அமைப்புக்களும் பாஜக-வின் துணை அமைப்புக்களாக மாற்றப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் கூட கேள்விக்கு உள்ளாகி இருக்கின்றன. இதுதொடர்பான எந்த விமர்சனத்திற்கும் பிரதமர் மோடி பதிலளிப்பதில்லை என்றா லும், கேள்விகள் மோடியை தொடர்ந்து துரத்தியபடியே இருக்கின்றன. அமெரிக்க சுற்றுப்பயணத்திலும் அது நடந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், ஏதென்சிலுள்ள பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் “சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் மற்றும் ‘எதேச்சதிகார... தாராள வாத ஜனநாயகவாதி’ என்று கருதப்படும் பிரதமர் மோடி போன்ற தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி எத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “தான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, எதிர்கொண்ட சிக்க லான பல தருணங்களில், முக்கியமானது, ஜனநாயக விரோத தலைவர்கள் மற்றும் சர்வாதிகாரிகள் உடனான சந்திப்புதான்” என்று ஒபாமா தெரிவித்திருந்தார். “அமெரிக்க நலன்களில் தோழமையாக இருக்கும் சக்திகள், தனிப்பட்ட முறை யில் எனக்கு அழுத்தங்களை கொடுத்திருக்கின்றன. சீனாவை எடுத்துக்கொண்டால் நாங்கள் (அமெரிக்கா) அவர்களுடன் வணிகம் செய்ய வேண்டியிருந்தது. இதில், அமெரிக்காவின் ஏராளமான பொருளாதார நலன்கள் உள்ளன. இப்படியான தருணங்களில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பவர்கள் ஏற்கெனவே வழக்கத் தில் இருக்கும் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும்; அல்லது சரிப்படாத விஷயங்க ளை எதிர்க்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள்தான் ஜனாதிபதியாக இருந்த காலத் தில் நான் எதிர்கொண்ட சவாலாகும்” என்றும் ஒபாமா விரிவாக விளக்கியிருந்தார். மேலும், “எங்கு எதை ஏற்க வேண்டும், எங்கு எதை எதிர்க்க வேண்டும் என்ற புரிதல் அவசியமாகும்” என்று குறிப்பிட்ட ஒபாமா, “நான் நன்கு அறிந்த இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடி இருந்தால், இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் உரி மைகள் குறித்தும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் எடுத்துரைத்து இருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, “இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இஸ்லாமியர் கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு முக்கியமானது. நன்கு அறிந்த நண் பரான பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால் இந்தியாவில் சிறுபான்மையி னரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால் ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவித்து இருப்பேன்” என கூறியிருந்தார்.
‘இத்தகைய (சிறுபான்மையினருக்கான எதிரான) பிரச்சனை என்பது இந்தி யாவின் நலன்களுக்கு எதிரானது எனக்கூறி, இந்த விஷயங்கள் பற்றி நேர்மை யான முறையில் பேசுவது முக்கியம் என நினைக்கிறேன்’ என்பதையும் வெளிப்படை யாகவே மோடியிடம் கூறியிருப்பேன். எங்கு எதை ஏற்க வேண்டும், எங்கு எதை எதிர்க்க வேண்டும் என்கிற புரிதல் அவசியமாகும் என்று தெரிவித்து இருந்தார். அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஒபாமா அளித்த இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. வெள்ளை மாளிகையில், நரேந்திர மோடி - ஜோ பைடன் கூட்டாக நடத்திய செய்தியா ளர் சந்திப்பில் உடனடியாக எதிரொலித்தது. “இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பேச்சுரிமையை நிலைநிறுத்துவதற்கும் உங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என்று பெண் நிருபர் ஒருவர் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். இது மோடியை மட்டுமன்றி, உடனிந்த ஜோ பைடனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, பிரதமர் மோடி யின் முகம் இருண்டு போனது. ஆனால், அதை வெளிக்காட்டாமல் சமாளிப்பில் இறங்கிய பிரதமர் மோடி, “இந்தி யா ‘ஜனநாயகமான நாடு’ என மக்கள் சொல்வதாக சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சிலர் வேண்டாம் என்று சொன்னாலும் இந்தியா ஜனநாயக நாடுதான். ஜனாதிபதி பைடன் கூறியது போல், ஜனநாயகம் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் டிஎன்ஏ-வில் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை பின்பற்றியே வாழ்கிறோம். அதை நம் முன்னோர்கள் வார்த்தைகளா கச் சொல்லியிருக்கிறார்கள். நமது அரசியல் சாசனமும், நமது அரசாங்கமும், ஜன நாயகத்தை வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. எனவே இந்தியாவில் சாதி, மத பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை” எனக் கூறி, ஒருவழியாக பேட்டியை நிறைவு செய்தார்.
75 எம்.பிக்கள் கடிதம்
முன்னதாக இவ்விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆங் காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. ‘இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம் பறிப்பு போன்றவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, ஜனாதிபதி ஜோ பைடனுக்கு, செனட்டர்கள் உட்பட அமெரிக்க எம்.பி.க்கள் 75 பேர் கடிதம் எழுதினர். அமெரிக்க செனட்டர் கிரிஸ் வான் ஹோலென் மற்றும் அதன் பிரதிநிதி பிரமிளா ஜெயபால் தலைமையிலான இந்த குழுவில், ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனாதி பதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருக்கும் பெர்னீ சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் உட்பட 18 செனட்டர்கள் (மேலவை உறுப்பினர்கள்), 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தனர். இல்ஹான் ஓமர், ரஷிதாத் லைப் மற்றும் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ உள்ளிட்ட செனட்டர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையையும் புறக்கணித்தனர். அதுமட்டுமல்ல, இந்தியாவில் “ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் -வீராங்க னைகள் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்? 2005 முதல் 2014 வரை பிரதமர் நரேந்திர மோடி, ஏன், அமெரிக்காவிற்கு வரத் தடை விதிக்கப்பட்டது? எந்த விசாரணையும் இல்லாமல் ஏன், மாணவர் சங்க தலைவர் உமர் காலித் 1000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்?” என பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பும் டிஜிட்டல் திரையுடன் கூடிய வாகனமும் நியூயார்க் நகரை வலம் வந்தது. “கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா” என்றும் அந்த டிஜிட்டல் திரை பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தது.
இவ்வாறு கேள்விகளால் துரத்தியடிக்கப்பட்டு, பிரதமர் மோடி அமெரிக்காவில் ஏகப்பட்ட அவமானங்களைச் சந்தித்தார். ஆனாலும், ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோருக்கு விலை உயர்ந்து பரிசு வழங்கியதையும், முகேஷ் அம்பானி உள்ளிட்ட முதலாளிகளுடன் சேர்ந்து இரவு விருந்தில் பங்கேற்றதையும் ஊடகங்களில் பிரதானச் செய்திகளாக மாற்றினார். இந்நிலையில், மோடிக்கு ஏற்பட்ட அவமானங்களுக்காக, அமெரிக்காவில் ஒன்றும் செய்ய முடியாத சங்-பரிவாரங்கள், தற்போது இந்தியாவில் விழுந்து பிராண்டி வருகின்றனர். பாரக் ஒபாமாவிற்கு ‘உசேன் ஒபாமா’ என்று பட்டம் சூட்டியும், அவர் முஸ்லிம்.. அதனால்தான் மோடியை விமர்சித்து பேட்டி அளித்திருக்கிறார் என்றும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதையொட்டி டுவிட்டரில் கருத்துப் பதிவிட்ட பத்திரிகையாளர் ஒருவர், “உணர்வு களை புண்படுத்தியதற்காக ஒபாமா-வுக்கு எதிராக கவுகாத்தியில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஒபாமா-வை விமானத்தில் இருந்து இறக்கி அவரை கைது செய்ய அசாம் போலீசார் வாஷிங்டனுக்கு ஏதும் செல்கிறார்களா?” என்று கிண்டலாக கேட்ட நிலையில் அவர்மீதும் பாய்ந்துள்ளனர்.
நாட்டின் எந்த மூலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசினாலும், அவர்களுக்கு எதிராக அசாமில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதையே அந்த பத்திரிகையாளர் மறை முகமாக விமர்சித்திருந்தார். கடந்த பிப்ரவரியில் காங்கிரஸ் தலைவர் பவன் கேராவை கைது செய்தது மற்றும் கடந்த ஆண்டு அப்போதைய குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை கைது செய்தது உட்பட அசாம் காவல்துறை, வெளிமாநிலங்களில் நடக்கும் சம்பவங்களில் கூட அத்துமீறி தலையிட்டு, கைது நடவடிக்கை மேற் கொண்டதை யாரும் மறந்து விட முடியாது. அதனைத்தான் பத்திரிகையாளரும் சுட்டிக் காட்டியிருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளரின் இந்த டுவீட்டால் அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவே கொதித்தெழுந்து விட்டார். “இந்தியாவிலேயே உசேன் ஒபாமாக்கள் நிறைய பேர் உள்ளனர். வாஷிங்டனுக்கு செல்வதற்கு முன்பு நாம் இவர்களை கவனித்துக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அசாம் காவல்துறை எங்களின் சொந்த முன்னுரிமைகளின்படிதான் செயல்படும்.” என்று ஆவணமாக குறிப்பிட்டுள்ளார். ஹிமந்தாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
“’என் நண்பர் பாரக்’ இப்போது ‘ஹூசைன் ஒபாமா’ ஆகிவிட்டார். வெள்ளை மாளி கையில் பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஹிமந்தா பதிலளித்துள்ளார். ஜனாதிபதி ஒபாமா ஒரு முஸ்லிம் என்றும் இந்திய முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கப் பட வேண்டும் என்றும் கூறும் ஹிமந்தா சர்மாவின் டுவீட்டானது, மோடியிடம் கேட் கப்பட்ட கேள்வியின் முன்மாதிரியாக இருக்கிறது. இது குறித்து பிரதமர், வெளியுற வுத்துறை மற்றும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?” என்று காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் சுப்ரியா ஷ்ரினடே கேள்வி எழுப்பியுள்ளார். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும், ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் இந்த டுவீட் பற்றி விமர்சித்துள்ளார். “பாரக் இப்போது ஹூசைன் ஆகிவிட்டார். பாரக் ஒபாமா தெரிவித்த கருத்துகள் தவறு இல்லை என்பதை நிரூபித்துள்ளார், பாஜகவின் முதல்வர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகாய் வெளியிட்டுள்ள டுவீட்டில், “இந்தியாவில் பாகுபாடு இல்லை என்று பிரதமர் மோடி கூறிய 24 மணி நேரத்திற்குள், அவரது கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் ஒபாமாவை ‘உசேன் ஒபாமா’ என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் முஸ்லிம்களை கவனித்துக் கொள்ள தனது மாநில காவல்துறையைப் பயன்படுத்துவதாக ஒரு மறைமுக அச்சுறுத்தலை வெளி யிடுகிறார். இது சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் போலித்தனத்தை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பைடனுக்கு வைகானச- கல்ப சூத்திர சடங்கு
80 வயதைக் கடந்து, ஆயிரம் பிறையைக் கண்டவரான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு, யஜுர் வேதத்தில் குறிப்பிடப்பட்ட வைகானச-கல்ப சூத்திரம் என்ற சடங்கு முறையை குறிப்பிடும் வகையில், உயர் ரக வெள்ளியிலான விநாயகர் சிலை, விளக்கு, தாமிரத் தட்டு, குஜராத் உப்பு, ஜார்க்கண்ட் பட்டுத்துணி, உத்தரகண்ட் அரிசி, மகாராஷ்டிர வெள்ளம் ஆகியவற்றை, கையால் செய்யப்பட்ட சந்தனப் பேழையில் வைத்து பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 காரட் பச்சைக் கல் வைரத்தை மோடி பரிசாக வழங்கினார்.
முதலாளிகளுடன் சேர்ந்து இரவு விருந்து
வெள்ளை மாளிகையில் அளிக்கப்பட்ட இரவு விருந்தில், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ஆனந்த் மகிந்திரா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாதெள்ளா, இந்திரா நூயி, ஆப்பிள் சிஇஒ டிம் குக் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார். இந்திய அரசுப் பிரதிநிதிகள் என்று பார்த்தால் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் கவத்ரா ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.