states

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான திட்ட மதிப்பு 29 சதவீதம் அதிகரிப்பு

புதுதில்லி,ஜன.21- புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான திட்ட மதிப்பு ரூ.1,250 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்லியில் ராஷ்ட்ரபதி பவனுக்கு அருகில் சுமார் 13 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.  64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை டாடா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.கொரோனா காலகட்டத்திலும் நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான திட்ட மதிப்பு 283 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டது. இது முந்தைய திட்ட மதிப்பை விட 29 சதவீதம் அதிகமாகும். இதனால் புதிய நாடாளுமன்றத்திற்கான திட்ட மதிப்பு ரூ.1250 கோடி ஆக அதிகரித்துள்ளது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்னர் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.