சீனா சென்றபோது பிரதமர் மோடி படு ஸ்டைலாக குர்தா, சல்வார் கமீஸ், இத்தாலிய கருப்புக் கண்ணாடியுடன் காட்சியளித்தார். மங்கோலி யா சென்றவுடன் மங்கோலிய உடையில் போஸ் கொடுத்தார். தொப்பிக் கண்காட்சி நடத்தும் அளவுக்கு ஏராளமான தொப்பிகளை வைத்துள்ளார். அவர் அணியும் ஆடை இந்திய பருத்தி, சில்க் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் வெளி உலகைப் பார்ப்பது இத்தாலிய பிவல்கரி கருப்புக் கண்ணாடி மூலமாகத்தான்! பையில் ஜெர்மன் மாண்ட்பிளாங்க் பேனா! முதலாளிகளைச் சந்திக்கும் போது நவீன அரசியல் நிர்வாகி அணியும் உடையணிகிறார். நாடாளுமன்றத்தில் செங்கோலை ஏந்தும்போது வேட்டி அணிகிறார். செங்கோலை மண்டியிட்டு வாங்கும் போது, முழங்கால் பின்பகுதி கேமரா கண்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக நீண்ட காலுறை அணிந்திருந்தார். அவரது அலங்காரம் ஒவ்வொன்றும் மிக நுட்பமாக திட்டமிடப்படுகிறது. 2014 இல் மோடி பிரதமரானதுமே அவரது ஆடை அலங்காரத்திற்கு ட்ராய் கோஸ்டா என்ற ஆடை வடிவமைப்பாளர் பணியமர்த்தப்பட்டார். அவர் பிரதானமாக அணிவது காவிநிற உடை. இஸ்லாமியம் தொடர்பான பச்சை நிற உடையில் அவர் தோன்றியதே கிடையாது.
ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் அந்த மாநிலத்தின் கலாச்சாரம் தொடர்பான ஆடை தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும் விதவிதமான தலைப்பாகையை அணிவார். அது மீடியாக்களில் பேசு பொருள் ஆக்கப்படும். சமீபத்தில் நடைபெற்ற உத்தரகண்ட் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எட்டு மணி நேர இடைவெளியில் நான்கு முறை தனது ஆடைகளையும், ஒப்பனைகளை யும் மாற்றினார். 2015 அமெரிக்க பயணத்தில் ஒபாமாவை சந்தித்தபோது பல லட்சம் விலை மதிப்புள்ள தனது பெயர் பொறித்த கோட்-சூட் அணிந்தார். எதிர்க்கட்சிகள் இது பற்றி விமர்சித்த போது, உலகிலேயே அதிகமான விலைக்கு அந்த ஆடைகள் ஏலத்தில் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் இது பற்றிக் கூறும் போது, மோடி ஒரு தடவை அணிந்த குர்தாவில் மீண்டும் அவரைப் பார்க்க முடியாது. வேண்டுமானால் கூகுளில் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். மோடியின் நிகழ்ச்சிகளுக்கு என்ன உடை, எந்த விதமான அலங்காரம் செய்ய வேண்டும் என்பது மாதக்கணக்கில் திட்டமிடப்படுகிறது. பாரம்பரிய கதகளி நடனத்திற்கானத் தயாரிப்புகளைப் போன்று பல மணி நேரம் பிடிக்கும் பொறுமையான ஒப்பனை மோடிக்குத் தேவைப்படுகிறது . ஆனால் பிரதமர் மோடி மிக முக்கியமான கோப்புகளைப் படித்துப் பார்க்க பத்து நிமிடம் மட்டும் தான் எடுத்துக்கொள்கிறார் என்கிறார் காங்கிரசின் அகமது படேல். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வித விதமான ஆடை அணிந்து வருவதால் உண்மையான மோடி என்று ஒருவர் இல்லையென்று உணரலாம்.