புதுதில்லி, பிப். 21 - ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டு அரங்கான டெப்லாசில் (Teflas) தந்தை பெரியாரின் படம், மாணவர்களின் எழுச்சிமிகு முழக்கத்திற்கு இடையே மீண்டும் திறக்கப்பட்டது. சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை வன்கொடு மையால் மும்பையில் ஐஐடி-யில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் தர்ஷன் சோலங்கிக்கு நீதிகேட்டு, இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைகொண்ட மாணவர்கள் ஞாயிறன்று மாலை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முடிந்த பின், தமிழ்நாட்டு மாண வர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் தந்தை பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். அதன்பின்னர் இரவு 9 மணியள வில் மார்க்சிஸ்ட் ஆய்வு வட்டமான ‘100 பூக்கள்’ (HFG) சார்பில் 1983-இல் வெளியான நையாண்டித் திரைப்படமான ‘ஜானே பி தோ யாரோ’ திரையிடப்படு வதாக இருந்தது.
இந்நிலையில், அங்கு வந்த ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த கும்பல் திடீர் தாக்கு தலில் ஈடுபட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டு மாணவர் களை சுற்றி வளைத்து, கனமான பொருட்களைக் கொண்டு தாக்கி வன்முறை வெறியாட்டம் நடத்தியது. இதில், 15-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த நாசர் முகம்மது மொய்தீன் என்ற மாணவர் படுகாயம் அடைந்தார். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமல்லா மல், மாணவர் செயற்பாட்டு அரங்கிலிருந்து மார்க்ஸ், லெனின், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் படங் களையும், ஏபிவிபி கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனங் களுக்கு உள்ளானது. “ஜேஎன்யுவில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தின் மீது பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், செவ்வாயன்று தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்குச் சென்று தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி னார். வன்முறை குறித்து விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவும் தில்லி காவல்துறை மற்றும் ஒன்றிய அரசின் உள்துறை, கல்வித்துறை அமைச்சர்களிடம் முறையிடுவேன் என்று தெரிவித்தார். தாக்குதலில் காயம் அடைந்த மாணவர் நாசருடன், ஜேஎன்யு பல்கலைக்கழக துணை வேந்தரையும் சந்தித்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன், மாணவர் செயற்பாட்டு அரங்கில் வைப்பதற்காக, எஸ்எப்ஐ போராளியும், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவருமான அய்ஷே கோஷிடம், தந்தை பெரியாரின் புதிய படத்தை யும் செந்தில்குமார் எம்.பி. வழங்கினார். அந்தப்படம் மாணவர்களின் ஆரவாரத்திற்கு இடையே மீண்டும் ஜேஎன்யு மாணவர் செயற்பாட்டு அரங்கில் திறக்கப் பட்டது. முன்னதாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், வீடியோ கால் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களிடம் பேசி ஆறுதல் கூறினார்.