ஆக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர்: “இந்தியாவில் பணக்காரர்கள் மட்டுமே உயிர்வாழ்வதை உறுதி செய்யும் முறை இருப்பதால், நாட்டில் ஒடுக்கப்பட்ட பழங்குடி, பட்டியல் வகுப்பு, இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். ஏழை-எளிய மக்கள், பணக்காரர்களைவிட அதிக வரி செலுத்தி, தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்குகின்றனர். சமத்துவமின்மையைக் குறைக்க, ஒன்றிய அரசு பணக்காரர்களுக்கு சொத்து வரி மற்றும் பரம்பரை சொத்துரிமை வரியை அமல்படுத்த வேண்டும்”.
மும்பை, ஜன.17- இந்தியாவின் 40 சதவீத செல்வத்தை வெறும் ஒரு சதவீத மெகா கோடீஸ்வரர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். மக்கள்தொகை யில் பாதி பேர், நாட்டின் மொத்த செல்வத்தில் வெறும் மூன்று சதவீதத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியாவில் மெகா கோடீஸ் வரர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டு களில் 102 இல் இருந்து 166 ஆக உயர்ந்துள் ளது என ஆக்ஸ்பாம் அமைப்பின் ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மாமன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், இந்தியாவின் சமத்துவ மின்மையை விவரிக்கும் ‘பணக்காரர்களின் வாழ்க்கை’ (Survival of the Richest) என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆக்ஸ்பாம் என்பது உலகளாவிய வறுமை யை ஒழிப்பதற்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகும்.
லேசாக வரி விதித்தால் கூட போதும்
அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டிருப்பதாவது:
* இந்தியாவில் உள்ள 10 பெரும் பணக்காரர் களுக்கு 5 சதவீதம் வரி விதித்தால், நாட் டில் பள்ளி செல்லாத குழந்தைகள் அனை வரையும் மீண்டும் பள்ளிக்கு அனுப்ப அத்தொகை போதுமானதாக இருக்கும். மேலும், பெரும் கோடீஸ்வரர்களுக்கு 2 சதவீதம் வரி விதிப்பதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டின் ஊட்டச் சத்து குறைபாட்டிற்கு தீர்வு காண ரூ. 40,423 கோடி கிடைக்கும்.
* கொரோனா தொடங்கியதில் இருந்து, கடந்த நவம்பர் மாதம் வரை பில்லிய னர்களின் சொத்து மதிப்பு 121 சதவீதம் அதி கரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் அவர் களின் சொத்து மதிப்பு ரூ.3608 கோடி அதி கரித்துக் கொண்டிருக்கிறது.
* ஆனால் அவர்களிடமிருந்து அரசு பெற்ற ஜிஎஸ்டி என்பது மிகச் சொற்பமே. 2021-22 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் ரூ.14.83 லட்சம் கோடி வரு வாய் கிடைத்துள்ளது. இதில், முதல் 10 சதவீத பணக்காரர்களின் பங்கு வெறும் மூன்று சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 50 சதவீத மக்கள்தான் 64 சதவீத வரியை செலுத்தி உள்ளனர்.
* இந்தியாவின் 100 மெகா பணக்காரர் களின் சொத்து மதிப்பு ரூ.54.12 லட்சம் கோடி. இது ஒன்றரை ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு சமம்.
* கெளதம் அதானியின் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான சொத்துக்கள் மீது ஒருமுறை வரி விதித்தால், ரூ.1.79 லட்சம் கோடியை திரட்ட முடியும். ஆண் டுக்கு 50 லட்சம் தொடக்கப் பள்ளி ஆசிரி யர்களை பணியமர்த்த இந்த தொகை போதுமானது.
* ஒரு துறையில் பணியாற்றும் ஆண், ஒரு ரூபாய் ஊதியம் பெறும்போது, அதே துறையில் உள்ள ஒரு பெண் 63 பைசா மட்டுமே ஊதியமாக பெறுகிறார். இது பாலின சமத்துவமின்மைக்கு மிகச்சிறந்த உதாரணம்.