அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதை மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்த மக்களவை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று விட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான ‘மதச்சார்பற்ற நாடு’ என்பதை மாற்றி இந்தியாவை ‘மதம் சார்ந்த நாடு’ என அறிவிப்பதற்கும், மீண்டும் மனு நூலின் அடிப்படையில் வருண வேற்றுமையை சட்டப்பூர்வமாக ஆக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. இதை வெளிப்படையாக பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் இந்தத் தேர்தல் பரப்புரையில் பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்கி உள்ளது. அதை அழித்தொழித்து மீண்டும் மநு நூலின் அடிப்படையில் நாட்டை ஆள்வதற்கு, இந்திய சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகமாக சட்டரீதியாக மாற்றி அமைப்பதற்கு பாஜகவும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் முற்படுகின்றன. அரசமைப்புச் சட்டம் தான் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பாதுகாக்கிறது. அது இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த உரிமையும் இருக்காது. எனவே, அவர்களது சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும். அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம். இந்தத் தேர்தலில் சங்- பரிவார் கும்பலை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டுவோம்! நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்போம்.
- தொல். திருமாவளவன் -