புதுதில்லி, ஜூன் 7 - குறுவைப் பருவத்திற்கான நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை உள்ளிட்ட 14 வகை வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஏற்கெனவே இருந்த விலையில், நெல்லுக்கு 7 சதவிகிதம், எள்ளுக்கு 10.3 சதவிகிதம், நிலக்கட லைக்கு 9 சதவிகிதம், ஜவ்வரிசி, கம்பு, கேப்பை, முந்திரி, சோளம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றுக்கு 10.4 சதவிகிதமும் ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 040 ரூபாயாக இருந்த நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தற்போது குவிண்டா லுக்கு 2 ஆயிரத்து 183 ரூபாயாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதுவே கிரேடு ‘ஏ’ ரகத்துக்கு 2 ஆயிரத்து 203 ரூபா யாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சோளம் குவிண்டா லுக்கு 2 ஆயிரத்து 990 ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 225 ரூபாயாகவும், சோளம் ஒட்டுரகத்திற்கு 2 ஆயிரத்து 970 ரூபாயி லிருந்து 3 ஆயிரத்து 180 ரூபாயாகவும், கம்புக்கு 2 ஆயிரத்து 350 ரூபாயி லிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கேழ்வரகிற்கு 3 ஆயிரத்து 578 ரூபாயி லிருந்து 3 ஆயிரத்து 846 ரூபாயாகவும், மக்காச் சோளத்திற்கு ஆயிரத்து 962 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 090 ரூபாயா கவும், துவரம் பருப்புக்கு 6 ஆயிரத்து 600 ரூபாயிலிருந்து 7 ஆயிரம் ரூபாயா கவும், பாசிப் பயிறுக்கு 7 ஆயிரத்து 755 ரூபாயிலிருந்து 8 ஆயிரத்து 558 ரூபா யாகவும், உளுந்துக்கு 6600 ரூபாயி லிருந்து 6 ஆயிரத்து 950 ரூபாயாக வும், நிலக்கடலைக்கு 5 ஆயிரத்து 850 ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 377 ரூபா யாகவும், சூரியகாந்தி விதைக்கு 6 ஆயி ரத்து 400 ரூபாயிலிருந்து 6760 ரூபாயாக வும், சோயாபீனுக்கு (மஞ்சள்) 4 ஆயி ரத்து 300 ரூபாயிலிருந்து 4 ஆயிரத்து 600 ரூபாயாகவும் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் விவ காரங்கள், வர்த்தகம் மற்றும் ஜவு ளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “2023-24 நிதியாண்டிற் கான சந்தைப்படுத்தல் பருவத்தில் மானாவாரி சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்பு தல் அளித்திருக்கிறது. விவசாயி களுக்கு லாபம் கிடைக்கும் வகையிலும், பயிர் பல்வகைப்படுத்த லை ஊக்குவிக்கவும் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை ஏமாற்றிய மோடி அரசு
நெல், பருத்தி உட்பட விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மிக குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) மிக அதிகபட்சமாக உயர்த்திவிட்டோம் என்று ஒன்றிய பாஜக அரசும் அதன் ஊதுகுழல்களும் கூறியிருப்பது முற்றிலும் ஏமாற்றே என அகில இந்திய விவசாயிகள் சங்கம் விமர்சித்துள்ளது. நெல் உள்பட விவசாயிகளின் விளைபொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி இடுபொருட்கள் உட்பட விவசாயிகளுக்கு ஆகும் மொத்த உற்பத்திச் செலவுடன் 50சதவீதம் கூடுதலாக வைத்து மொத்தத்தில் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதாரவிலை யாக நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் ஒன்றிய பாஜக அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் குறைந்தபட்ச ஆதாரவிலையை உயர்த்துவது என ஒன்றிய அமைச்சரவை புதனன்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,183 அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்திச் செலவு + 50சதவீதம் என்ற அடிப்படையில் (சி2+50) எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரையின்படி கணக்கிட்டால் தற்போது நெல் குவிண்டாலுக்கு ரூ.2,707.50 அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரூ.2,183 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.524.50 இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிலக்கடலைக்கு ரூ.7,411.50 அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ரூ.6,377 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இழப்பு ரூ.1,100.50. மக்காச்சோளத்திற்கு ரூ.2,569.50 அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக, ரூ.2,090 மட்டுமே அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு இழப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.479.50. அதேபோல மீடியம் ரக பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,095.50 அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ரூ.6,620 மட்டுமே அறிவிக்கப் பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இழப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,475.50. தற்போது அரசு அறிவித்திருப்பது 2022-23 ஆண்டுக்கான விலையாகும். இந்த காலக்கட்டத்தில் உரவிலை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. பாசன வசதிகளுக்கான செலவுகள் பெருமளவு அதிகரித்துள்ளன. அவற்றையெல்லாம் அரசு கணக்கில் கொள்ளவில்லை. ஓராண்டு கழித்து இத்தகைய இடுபொருட்களின் விலை இன்னும் கடுமையாக உயரும் நிலையே உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ஒன்றிய பாஜக அரசு மிக மிகக் குறைவான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து விவசாயிகளை வஞ்சித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான குறுவைப் பருவ பயிர்களுக்கான விலைக் கொள்கை குறித்த அறிக்கையையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. எனவே மிக அதிகமாக குறைந்தபட்ச ஆதாரவிலையை அறிவித்துவிட்டதாக ஒன்றிய ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வது கடும் கண்டனத்திற்குரியது என அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் டாக்டர் விஜு கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.