states

img

நாடாளுமன்றம் 3-ஆவது நாளாக முடங்கியது!

புதுதில்லி, ஜூலை 20 - நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், ஜூலை 18-ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ள நிலையில், முதல்நாளில் காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  பின்னர் குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக, பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதேபோல மாநிலங்களவையிலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும், அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல கூடிய நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பினர். நாட்டில் தற்போது முன்னுக்கு வந்துள்ள பணவீக்கம், விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான  5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பு, அக்னிபாதை காண்ட்ராக்ட் ராணுவ வீரர்கள் திட்டம் உள்ளிட்ட வை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். 

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள், திமுக, திரிணா முல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி களின் எம்.பி.க்கள் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், நாடாளுமன்ற விதிகளின் அடிப்படையில், அவைத்தலைவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ்களையும் வழங்கினர்.  ஆனால், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா,  மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்திற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதனால், ஆவேசமடைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி, சபாநாயகர் இருக்கை முன்பாக திரண்டு, மோடி  அரசுக்கு எதிராக தொடர்ந்து கண்டன முழக்கங் களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்படவே, நாள் முழுவதும் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.  செவ்வாயன்று நாடாளுமன்றம் கூடிய போது, மீண்டும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இரண்டாவது நாளில் மக்களவை யை நடத்திக்கொண்டிருந்த பாஜக எம்.பி. கிரிட் பிரேம்ஜிபாய் சோலங்கி, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே, அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்து, பேரழிவு ஆயுதங்கள், அவற்றின் விநியோக முறைகள் (சட்ட விரோத நடவடிக்கைகள் தடை) திருத்த  மசோதாவை அறிமுகம் செய்யுமாறு கூறினார். ஜெய்சங்கரும் அந்த மசோதாவை அறிமுகம் செய்தார். ஆனால், அவையில் அமைதியை ஏற்படுத்த முடியாததால், துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அவையை அவர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மாநிலங்கள் மீது பழிபோட்ட நிர்மலா சீதாராமன்

இதனிடையே, டுவிட்டரில் தொடர் பதிவுகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவது இது முறையல்ல. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பல மாநிலங்கள் உணவு தானியங்களுக்கான வரிகள் மூலம் கணிசமான வருவாயை பெற்றன” என்று தெரிவித்தார். “பஞ்சாப் மட்டும் உணவு தானியத்தின் மீதான கொள்முதல் வரி வாயிலாக ரூ. 2 ஆயிரம்  கோடி வசூலித்தது. உத்தரப்பிரதேசம் ரூ. 700கோடி வசூலித்தது. ஜிஎஸ்டி முதன்முதலாக அமல்படுத்தப்பட்டபோதே, பிராண்டட் தானி யங்கள், பருப்பு வகைகள், மாவு ஆகியவற்று க்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. பின்னர் இது திருத்தப்பட்டது. பதிவு செய்யப்பட்ட பிராண்ட் அல்லது பிராண்ட் கீழ் விற்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது. இப்போதும், பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்படாத சில்லரை விற்பனையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. லேபிள் ஒட்டி  விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது  மட்டுமே 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப் பட்டுள்ளது” என்று கூறினார்.

5 சதவிகித ஜிஎஸ்டியை ரத்து செய்ய மறுப்பு

மேலும், “பாஜக அல்லாத மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒப்புத லுக்குப் பிறகே கோதுமை மாவு மற்றும் பிற பொருட்களுக்கு சென்ட் வரி விதிக்கப்படு கிறது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் பஞ்சாப்,  சத்தீஸ்கர், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா  ஆகிய மாநிலங்கள் 5 சதவிகித வரியை விதிக்க ஒப்புக் கொண்டன. எனவே, அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிஎஸ்டி கவுன்சிலில் வந்த ஒருமித்த கருத்து மூலம்தான் உணவு தானியங்களுக்கு 5 சத விகித ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு எடுக்கப் பட்டது” என்றார். இந்நிலையில் 3-வது நாளாக புதனன்று காலை 11 மணிக்கு  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது.  மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்ட முன்னாள் தடகள  வீராங்கனை பி.டி. உஷா பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அதற்குப் பிறகு, வழக்கம்போல விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிரான முழக்கங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் இரு அவைகளிலும் கடும் அமளி நிலவியது.

3-ஆவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷங்களுக்கு  மத்தியில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா,  கோஷமிடுவதில் ஈடுபடும் உறுப்பினர் களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், அவர்கள் விவாதங்களில் பங்கேற்க வேண்டும். நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர் என கூறினார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதுபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி கள் அமளியில் ஈடுபட்டதால், அவைத்தலைவர் வெங்கையாநாயுடு, மாநிலங்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். முதலில் பிற்பகல் 2 மணி வரையும், அதன்பின்னர் 4 மணிவரையும் இரண்டு முறை நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனால் 3-ஆவது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, பணவீக்கத் திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தங்களின் போராட்டம் தொடர்பாக பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதம், ஜிஎஸ்டி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராகவும் இப்போராட்டம் நடைபெறுகிறது” என்றார். காங்கிரஸ் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “53 ஆண்டுகளுக்கு முன்னர் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட நாள் இன்று. ஆனால் ஒன்றிய ஆளும் மோடி அரசாங்கமோ, வங்கிகளை தனியார்மயமாக்கி உள்ளது. வங்கிகள் விற்பனைக்கு எதிரான மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது” என்றார்.