states

img

இதிலுமா ஏமாற்றுவேலை? - மோடி டிரோன் இயக்கவில்லை ; இயக்கியது வேறு ஒருவர்

புதுதில்லி, ஜூலை 29- ஜி-20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு தில்லியில் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் கட்டடத்தில் நடைபெற உள்ள நிலையில், அந்தக்  கட்டடம் சுமார் 2,700 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டது. இக்கட்டடத்தின் 3-ஆவது தளத்தில் 7,000 பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு பாரத் மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தின் திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. பிரதமர் மோடி வித்தியாசமான முறையில் ஆளில்லாத குட்டி விமானம் (டிரோன்) மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வை பாஜக ஆதரவு ஊடகங்கள் ஏதோ விண்வெளி சாதனை போல தலைப்புச் செய்தியாக வெளியிட்ட நிலையில், டிரோன் இயக்கிய விவகாரத்திலும் மோடி மிகப்பெரிய திரைக்கதையை வடிவமைத்து நாட்டை ஏமாற்றியுள்ளார். விஷயம் என்னவென்றால் பிரதமர் மோடி டிரோன் இயக்கவில்லை. 10 அடி தூரத்தில் தள்ளி இருந்த டிரோன் ஆபரேட்டரே டிரோனை இயக்கியுள்ளார். பிரதமர் மோடி வெற்று ரிமோட்டை வைத்து சும்மா பாசாங்கு மட்டுமே செய்துள்ளார்.  இது தொடர்பான வீடியோவை  காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு இணையத்தில் லீக் செய்தது. இதையடுத்து சமூக வலைத் தளங்களில் “இதிலுமா ஏமாற்றுவேலை” என பிரதமர் மோடியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.