கொல்கத்தா, ஜூலை 1- திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதி போதுமானதாக இல்லை. அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அம்மாநில சி.பி.எம். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திபாகர் ஹன்ஸ்டா மிட்னாப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக கடந்த ஞாயிறன்று அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் தரையில் தான் படுக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பாய் விரிப்பு கூட கொடுக்காமல் பிளாஸ்டிக் தாளை நோயாளிகளுக்கு விரிப்பாக கொடுத்தனர் என்று அவருடைய உறவினர்கள் கூறினர். மேற்கு வங்கத்தில் மம்தாவினுடைய சதியால் 2011 தேர்தலில் சி.பி.எம் கடும் தோல்வியை சந்தித்தது. ஆயினும் அதே தேர்தலில் திபாகர் ஹன்ஸ்டா 2011-2016 சட்டசபை உறுப்பினராக பதவி வகித்தார். இது குறித்து அவர் சமூக வலை தளங்களில் தான் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு படுக்கை கொடுக்கப்படும் வரை 28 மணி நேரம் நோயால் மிகவும் சிரமப்பட்டதாக பதிவிட்டார். அவருடைய உறவினர்களும் இது குறித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். பிறகு அடிப்படை வசதிகள் கூட இல்லாத மருத்துவமனைகள் மாநிலத்தின் முன் மாதிரி வளர்ச்சி என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் “இந்த மருத்துவமனையில் வி.ஐ.பி.களுக்கென தனியாக வசதி இல்லை, படுக்கை கிடைத்தவுடன், வார்டு பொறுப்பாளர் அவருக்கு படுக்கை ஏற்பாடு செய்தார்” என்றும் மருத்துவமனை முதல்வர் பஞ்சனம் குண்டு தெரிவித்தார்.