states

இன்னும் 24 மாதங்களுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவை வழங்கப்படுமாம்

புதுதில்லி, ஏப்.4-  இன்னும் 18-24 மாதங்களுக்குள் பிஎஸ் என்எல் மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களில் 4ஜி சேவை வழங்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், இந்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் திட்ட  முன்னெடுப்பின் கீழ், தேவைப்படும் முன்னேறிய கட்டமைப்புகளுடன் கூடிய 3 ஜி, 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகளை நாடு முழு வதிலும் வழங்குவதற்கு தேவையான முயற்சிகளை பிஎஸ்என்எல் எடுத்துள்ளதா என்றும், அப்படியெனில், அதன் விபரங்கள் என்ன என்றும்,  மேலும்  இந்திய மற்றும் அயல்நாட்டு மாபெரும் தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் விதத்தில், முன்னேறிய கட்டமைப்புகள் கொண்ட 3 ஜி, 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகளை வழங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால வரையறை விபரங்கள் என்ன என்றும், மேலும் அந்நிறுவனங்களின் மறுமலர்ச்சி திட்டத்திலிருந்து இதுவரை செய்யப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட நிதி ஏற்பாடுகளின் விபரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவு சிங் சௌகான், 2009 பிப்ரவரியிலிருந்து, 3ஜி சேவைகளை, பிஎஸ்என்எஸ் வழங்கி வருகிறது. மேலும் அரசின் ஆத்ம நிர்பார் முன்னெடுப்பை யொட்டி, அதிகாரம் பெற்ற தொழில்நுட்பக் குழுவின் (Empowered Technology Group - ETG) பரிந்துரைகளின் மேல்,  4ஜி-க்கான இந்திய மையத்தை வரிசைப் படுத்தும்படி பிஎஸ்என்எல்- க்கு வழிகாட்டப் பட்டது. அதன்படி 1 லட்சம் 4 ஜி தளங்களுக்கான டெண்டர்கள், 23-11-2022 அன்று ஏலம் துவங்கப்பட்டு, ஏலத்தின் மதிப்பீடுகள் முடிக்கப்பட்டு இறுதிநிலை அனுமதியின் கீழ் உள்ளது. கொள்முதல் ஆணை வைக்கப்பட்ட பிறகு, 18-24  மாதங்களுக்குள் 4ஜி சேவைகள் துவங்கப் படும். 4ஜி சேவைகள் வெளிவந்த பிறகு,  இந்த 4ஜி நெட்வொர்க்கை, 5ஜி சேவை களாகவும் தரம் உயர்த்தலாம்  என்று தெரிவித்துள்ளார். (ந.நி.)