அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை ஒன்றிய மோடி அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது மோடி அரசின் ஊழல் திட்டம் என தொடக்கம் முதலே குற்றம்சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தேர்தல் நன்கொடைகளை வங்கிப் பத்திரங்களாக அரசியல் கட்சிகள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வியாழனன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.
ஒரே கட்சி...
2018 முதல் 2023 வரையில் அரசியல் கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையில் தேர்தல் பத்திரத் திட்டத்தை கொண்டு வந்த அதிகபட்சமாக பாஜக ரூ. 6,566.11 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ. 1,123.3 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 1.092.98 கோடியும் பெற்றுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் முக்கிய தேசிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பைசாவை கூட தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெறவில்லை. இந்த விவகாரத்தை அரசியல் சார்புள்ளவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் சமூக வலைத்தளங்களில்,”தேசத்தில் இப்படியும் ஒரு கட்சியா? தேர்தல் பத்திரம் திட்டம் மக்களுக்கு எதிரான திட்டம் என எதிர்த்து, அதே எதிர்ப்புக்காக ஒரு ரூபாய் கூட தேர்தல் பத்திரம் மூலம் காசு வாங்காமல் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான், உண்மையான அரசியல் கட்சி” என்று வாழ்த்துகளுடன் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் சமூகவலைத்தளங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி டிரெண்டிங்கில் வைரலாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்திலும்...
தேர்தல் பத்திர வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில்,”ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டும் தேர்தல் பத்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நன்கொடை பெறவில்லை. ஒரு மாநிலத்தில் (கேரளா) ஆட்சியில் இருந்தபோதும் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை பெறவில்லை” என மார்க்சிஸ்ட் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் வாதிட்டார்.