புதுதில்லி, ஜூலை 29- ‘‘அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் அதிகமாக அச்சுறுத்தப்படுவது ஜனநாயகம் மட்டுமே!’’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா பதிலளித்துள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்னி’ என காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியது வியாழனன்று நாடாளு மன்றத்தில் பெரும் சர்ச்சையானது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்.பி.-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் குடி யரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, இந்த விவகாரம் நாடாளு மன்றத்தில் கிளப்பப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜகவின் எம்.பி. ரமாதேவியை சந்தித்துப் பேசினார். அப்போது, ‘‘இந்த விஷயத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்.
இதில் பாஜகவினர் என்னை ஏன் இழுக்கின்றனர்’’ என கேள்வி எழுப்பினார். அப்போது ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறுக்கீட்டு பேச முற்பட்டபோது, சோனியா காந்தி கோபமாக, ‘‘என்னிடம் நீங்கள் பேச வேண்டாம்’’ என்று கூறியதாக தகவல் வெளியானது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘பாஜக மூத்தத் தலைவர் ரமாதேவியிடம் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய சோனியா காந்தி வந்தபோது, பாஜக எம்.பி.-க்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தனர். அதேபோல் பாஜக எம்.பி. ஒருவரிடம் சோனியா காந்தி, நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் எனவும் கோபமாக கூறினார்’’ என்று தெரிவித்தார். இந்நிலையில், சோனியா காந்தியால், பாஜக எம்.பி.க்கள் அச்சுறுத்தப்பட்டதாக நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். ‘‘கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து முதல் நாள் நாடாளுமன்றம் வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி பற்றி விவாதத்தை புறக்கணித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், திட்டமிட்ட குழப்பத்தை ஏற்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தியது வருத்தம் அளிக்கிறது. அண்மைக் காலமாக, நாடாளுமன்றத்தில் அதிகம் அச்சுறுத்தப்படுவது ஜனநாயகம் மட்டுமே!’’ என்று மஹூவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.