அமித்ஷா தாக்கல்செய்துள்ள மூன்று புதிய மசோதாக் களும், ஏராளமான பக்கங்களைக் கொண்டவை என்பதில், அவற்றில் இருப்பவை இனிமேல்தான் முழுமையாக தெரியவரும். எனினும், மசோதாவில் இடம் பெற்றுள்ள சில அம்சங்கள் தற்போது ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளன. இவற்றில் முக்கியமாக, அரசாங்க நட வடிக்கைகள் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் அல்லது பிற நடவடிக்கை களின் மீது எதிர்ப்பை வெளிப்படுத்தும் கருத்துக்கள் தெரிவித்தால் அது குற்றம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வேண்டுமென்றே அல்லது தெரிந்தே, வார்த்தைகளால் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது காட்சிகள் மூலம், அல்லது மின்னணு தகவல் தொடர்பு மூலம், அல்லது வேறுவிதங்களில், அரசுக்கு எதிரான செயல்பாடுகளை தூண்டுதலும் குற்றமாகும். மேலும், பிரிவினை அல்லது ஆயுத மேந்திய கிளர்ச்சி அல்லது நாசகர நட வடிக்கைகளை, அல்லது பிரிவினைவாத நடவடிக்கைகளை செய்தல், ஊக்கு வித்தல் அல்லது இந்தியாவின் இறை யாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டால் குற்றம் என்று கூறியிருக்கும் மோடி அரசு, அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய நினைத்தால், புதி தாக கொண்டுவரப்படும் சட்டத்தின் பிரிவு 150-இன் கீழ் ஆயுள் சிறை அல்லது 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதில், குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உ.பி. மாடலை பின்பற்றி தண்ட னை கடுமையாக்கப்பட்டு உள்ளது.
முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 511 பிரிவுகள் இருந்த நிலை யில், மோடி அரசு கொண்டுவந்துள்ள பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023 மசோதாவின் முன்மொழிவில் 356 பிரிவுகளே வைக்கப்பட்டு உள்ளன. 3 ஆண்டுகள் வரை தண்டனைக்குரிய பிரிவுகளுக்கு ஒரு சுருக்க விசாரணை இருக்கும். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு விரைவில் வரும். குற்றப்பத்திரிகையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்து, 180 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்படும்; குற்றம் சாட்டப்பட்ட 30 நாட்களுக்குள் நீதிபதி தனது தீர்ப்பை வழங்க வேண்டும்; அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டால், 120 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. தவறான அடையாளத்தைக் கொடுத்து உடலுறவு கொள்பவர்கள் குற்றப் பிரிவின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். கும்பல் வல்லுறவு வழக்குகளில் 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் வழக்கில் மரண தண்டனை விதிக்கப் படும்.
சில குற்றங்களில் மின்னணு சாதன ஆதாரங்களை நீதிமன்றங்கள் சாட்சியாக ஏற்றுக்கொள்வதில்லை என்ற நடைமுறை இதுவரை இருந்து வந்தது. அதை மாற்றுவதற்கான விதிகள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன. இனிமேல் மின்னணு சாதனங்களை சாட்சியங்களாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சாட்சியங்களை சேகரிக்க நேரடி வீடியோகிராபி செய்வது அவசியம் என கூறப்பட்டு இருப்பதுடன், 7 ஆண்டு களுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட பிரிவுகளில் தடயவியல் குழுக்கள் அங்கு சென்று தடயங்களை சேகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய குற்றங்களுக்கு தண்டனை விதிப்பதில், அமெரிக்க நடைமுறையைப் பின்பற்றி, அபராதத்தோடு சேவை செய்வதையும் தண்டனையாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறிய தண்டனைகளுக்கு இதுவரை அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அபராதம் அல்லது மக்களுக்கு குறிப்பிட்ட துறையில் சம்பளம் இன்றி சேவை செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்படும். பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வேறுபட்ட தண்டனைகள் என்றிருந்த நடைமுறை நீக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட இந்த சட்டங்களுக்கு மட்டும் பாலின ரீதியிலான தண்டனை வேறுபாடு நீக்கப்பட்டு, அனைத்துப் பாலினத்தவருக்கும் ஒரே தண்டனை என்ற விதி கொண்டு வரப்பட்டு உள்ளது.