புதுதில்லி, பிப். 3 - சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான அவகாசத்தை 53 மணி நேரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு தடைவிதித்து, கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தர விட்டது. அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், கடல் பகுதியில் இருந்து 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் சுருக்கு மடி வலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் முறையிடப்பட்டது. ஒன்றிய அரசே, 2014-ஆம் ஆண்டு முதல் கடற்கரை யில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடிக்க அனுமதி வழங்கியிருப்பது சுட்டிக்காட்டப் பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான உச்ச நீதி மன்ற அமர்வு, “வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொள்ளலாம்; காலை 8 மணிக்குப் புறப்பட்டு, அதிகபட்சம் மாலை 6 மணிக்குள் இந்தப் படகுகள் கரை திரும்ப வேண்டும்” என்றும், கடந்த ஜனவரி 24 அன்று இடைக்கால அனுமதி வழங்கினர். இந்நிலையில், ஞானசேகர், மாரியப்பன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில்: “சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க நாள்தோறும் 10 மணி நேரம் மட்டுமே அவ காசம் வழங்கப்பட்டு உள்ளது. இது போது மானதாக இல்லை. 12 கடல் மைல்களுக்கு அப்பால் சென்றடைவதற்கு 4 முதல் 6 மணி நேரம் ஆகிறது. மீன் பிடிக்கும் இடத்தை தேர்வு செய்ய 3 மணி நேரம் ஆகிறது, சுருக்குமடி வலையை விரிக்க ஒரு மணி நேரம் ஆகிறது. மீன்கள் சிக்குவதற்கு காத்திருக்க 2 மணி நேரம் தேவை. கடலில் விரித்த வலையை மீண்டும் படகுக்கு கொண்டு வர 2 மணி நேரம் தேவை. மீண்டும் கடற்கரைக்கு திரும்ப 5 முதல் 8 மணி நேரம் ஆகிறது. எனவே, 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிக்குள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி 53 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி அளிக்கும் வகையில் உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தி யுள்ளனர்.