புதுதில்லி,பிப்.19- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்களைச் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 262 ரன்களை சேர்த்தது. ஒரு ரன் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 61 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து பிப்ரவரி 19 அன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா, அஸ்வின் சுழற்பந்துவீச்சில் ஆஸ்திரேலியா 113 ரன்களில் சுருண்டது. இதில், சுழற்பந்துவீச்சாளர்களான ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா 20 பந்துகளில் 31 ரன்களைச் சேர்ந்தார். கோலி 20 ரன்களில் அவுட்டானாலும், புஜாராவுடன் இணைந்து ஸ்ரீகர் பரத் அணியை வெற்றிபெறச்செய்தார். இதன் மூலம் 26.4 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து,6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும், மார்ஃபி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.