states

இந்தியாவின் ஏற்றுமதி 66,965 கோடி டாலராக அதிகரிப்பு : ஒன்றிய அரசு தகவல்

புதுதில்லி,ஏப்.15- 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 66,965 கோடி டாலராக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி கடந்த நிதியாண்டை விட 2021-22-ல் 34.50 சதவீதம் அதிகரித்து 66 ஆயிரத்து 965 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் மொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 15.51 சதவீதம் அதிகரித்து 6,475 கோடி டாலராக அதிகரித்துள்ளது.  2021-22 இல் மொத்த இறக்குமதி கடந்த ஆண்டை விட 47.8 சதவீதம் அதிகரித்து 75,668 கோடி டாலராக அதிகரித்துள்ளது.  மொத்த ஏற்றுமதி அளவிற்கும், மொத்த இறக்குமதி அளவிற்கும் இடையே உள்ள வேறுபாடான வர்த்தகப் பற்றாக்குறை அளவு 2021-22 ஆம் ஆண்டில் கடந்த நிதி ஆண்டை விட 518.87 சதவீதம் அதிகரித்து 8,703 கோடி டாலராக அதிகரித்துள்ளது.  2021 ஏப்ரலில் இருந்து 2022 மார்ச் வரையில் இந்தியாவின் சேவைத்துறையின் ஏற்றுமதி அளவு 25 ஆயிரம் கோடி டாலராக இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டை விட இது 21.31 சதவீதம் அதிகமாகும்.  கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறை, விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்ட சேவைத்துறைகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தும் சேவைத்துறை ஏற்றுமதி அளவு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்று ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.